‘தமிழ் சினிமாவில் தலைப்பு பஞ்சம்’: வைரமுத்து வருத்தம்!

‘தமிழ் சினிமாவில் தலைப்பு பஞ்சம்’: வைரமுத்து வருத்தம்!

‘தமிழ் சினிமாவில் தலைப்பு பஞ்சம்’: வைரமுத்து வருத்தம்!
Published on

சென்னையில் நடந்த இசை வெளியிட்டு விழாவில் கலந்து கொண்ட பாடலாசிரியர் வைரமுத்து சினிமா உலகில் தற்சமயம் நிலவும் சிக்கல்கள் பற்றியும் ‘நெடுநல்வாடை’யில் முழுப் பாடல்களை எழுதிய அனுபவம் குறித்தும் பேசினார்.

“தமிழ் சினிமாவை தலைப்பு பஞ்சம் பிடித்து ஆட்டுகிறது. தமிழில் பெயர் வைத்தால் வரிச்சலுகை கிடைக்கும் என்று சட்டம் போட்டும் அளவுக்கு தமிழ் சினிமாவின் தலைப்புகள் தமிழைவிட்டு தள்ளிப் போய்க் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில்தான் ஈராயிரம் ஆண்டுகள் பழமையான தலைப்பை தனக்கு ஆபரணமாகச் சூட்டிக் கொண்டுள்ளது ‘நெடுநல்வாடை’.

இந்தப் படத்திற்கு பாட்டெழுதியது ஒரு சுகமான அனுபவம். நெல்லை வட்டார வழக்கில் எழுதுங்கள் என்றும் ஆங்கில வார்த்தைகளைக் கலவாமல் எழுதுங்கள் என்றும் இயக்குநர் செல்வகண்ணன் கேட்டார். அதைக் கேட்டு நான் மகிழ்ந்து போனேன். ஒரு படத்தின் பாடல் என்பது உடலில் தொங்குகின்ற ஆடையாக இல்லாமல் உடம்போடு ஒட்டியிருக்கும் தோல் போல இருக்க வேண்டும் என்று நம்புகிறவன் நான். படத்திற்கும் பாடலுக்கும் இடையே இடைவெளி இருக்கக் கூடாது. படத்தின் இன்னொரு அங்கம்தான் பாட்டு. இந்த இலக்கணத்தை இப்பட பாடல் உங்களுக்குப் புரிய வைக்கும்.

நம் உறவுகள் புனிதமானவை. நம் உறவுகள் ஆழமானவை. அந்த உறவின் பெருமையை, மகள் வழிப் பேரனை ஒரு தாத்தா எப்படியெல்லாம் நேசிக்கிறார் என்ற அடிப்படைப் பண்பாட்டை செல்வக்கண்ணன் விவரித்துள்ளார். தமிழர்களின் உறவின் மிச்சத்தையும், எச்சத்தையும், உச்சத்தையும் சொல்லும் படமாக இது திகழும் என்று நான் நம்புகிறேன்.” என்று பேசினார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com