வெறுப்பைத் தூண்டும் 'தி கேரளா ஸ்டோரி 2' - முதல்வர் பினராயி விஜயன் பதிவு | Pinarayi Vijayan
சுதீப்தோ சென் இயக்கத்தில் 2023இல் வெளியான இந்திப் படம் `The Kerala Story'. மாற்று மதத்தினரை, முஸ்லீம்களாக மாற்றுகின்றனர் என்ற கருத்தை முன்வைத்த இந்தப் படம் மிகப்பெரிய விவாதங்களை எழுப்பியது. இப்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் `The Kerala Story 2' பிப்ரவரி 27ஆம் தேதி வெளியாகவுள்ளது. சமீபத்தில் அப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. அதிலும் பெண்களைக் காதலித்து, அவர்களை இஸ்லாமியர்களாக மாற்றுகிறார்கள் என்ற கருத்துதான் இடம் பெற்று இருந்தது. மேலும் இஸ்லாமிய பெண்கள் சேர்ந்து ஓர் இந்துப் பெண்ணின் வாயில் மாட்டிறைச்சியைத் திணிப்பது போலவும் காட்சி இடம்பெற்றிருந்தது.
இந்த ட்ரெய்லர் குறித்து பலரும் எதிர்கருத்துகள் தெரிவித்து வந்த நிலையில், இன்று அப்படம் குறித்து கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், "வெறுப்பைத் தூண்டும் 'தி கேரளா ஸ்டோரி' படத்தின் இரண்டாம் பாகம் வெளியீடு குறித்த தகவல்களை மிகுந்த கவனத்துடன் பார்க்க வேண்டும். முதல் பாகத்தின் வகுப்புவாத பரப்புரை மற்றும் அப்பட்டமான பொய்களை ஏற்கனவே பார்த்தோம். நமது மதச்சார்பற்ற கட்டமைப்பை அவமதிப்புடன் சித்தரிக்கும் இந்த முயற்சியை மீண்டும் கேரளா நிராகரிக்கும்.
வகுப்புவாத மோதலைத் தூண்டும் நோக்கில் புனையப்பட்ட கதைகள் சுலபமாக அனுமதிக்கப்படுகின்றன என்பதும், அதே நேரத்தில் கலை மூலம் வெளிப்படுத்தப்படும் விமர்சனங்கள் தடுக்கப்படுகின்றன என்பதும் அதிர்ச்சியளிக்கிறது. நமது நல்லிணக்க நிலத்தைப் பயங்கரவாதத்தின் மையமாகச் சித்தரிக்க முயற்சிக்கும் இந்த முயற்சிகளுக்கு எதிராக நாம் ஒற்றுமையாக நிற்க வேண்டும். உண்மை எப்போதும் வெல்லும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

