ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘தர்பார்’ படத்திற்கு தடை விதிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகை நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்துள்ள ‘தர்பார்’ திரைப்படம் வரும் ஜனவரி மாதம் 9.ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்கு தடை விதிக்கக்கோரி மலேசியாவை சேர்ந்த டி.எம்.ஒய் கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், நடிகர் ரஜினிகாந்த நடித்த 2.0 படத்தை தயாரித்த லைகா நிறுவனத்திடம் இருந்து, மலேசிய விநியோக உரிமையை பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் படத்தயாரிப்புக்கு 12 கோடி ரூபாயை ஆண்டுக்கு 30 சதவீத வட்டிக்கு கடனாக லைகா நிறுவனத்திற்கு வழங்கியதாகவும், அந்த தொகைக்கான வட்டியுடன் சேர்த்து தற்போது 23 கோடியே 70 லட்சம் ரூபாயை தங்களுக்கு லைகா நிறுவனம் வழங்க வேண்டி இருப்பதால், அந்த தொகையை வழங்காமல் தர்பார் படத்தை வெளியிடக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தர்பார் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி கோவிந்தராஜ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இதுகுறித்து பதிலளிக்க லைகா நிறுவனம் தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. அதையேற்று வழக்கை ஜனவரி 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.