"ரூ.500 உதவித்தொகையை மத்திய அரசு மறுத்தது!' - கல்லூரி நினைவைப் பகிர்ந்த ரெசூல் பூக்குட்டி

"ரூ.500 உதவித்தொகையை மத்திய அரசு மறுத்தது!' - கல்லூரி நினைவைப் பகிர்ந்த ரெசூல் பூக்குட்டி
"ரூ.500 உதவித்தொகையை மத்திய அரசு மறுத்தது!' - கல்லூரி நினைவைப் பகிர்ந்த ரெசூல் பூக்குட்டி

ஆஸ்கர் விருது வென்ற சவுண்ட் டிசைனர் ரெசூல் பூக்குட்டி, தான் படித்த கல்லூரியில் மத்திய அரசால் உதவித் தொகை மறுக்கப்பட்ட சம்பவத்டை உருக்கத்துடன் நினைவுகூர்ந்துள்ளார்.

இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் மாணவர் பாயல் கபாடியாவின் 'எ நைட் ஆஃப் நோட்டிங்' படம் கேன்ஸ் திரைப்பட விழா 2021-இல் சிறந்த ஆவணப்படத்திற்கான மதிப்புமிக்க விருதை வென்றது. இந்த விருதை பாயல் பெற்றுள்ள நிலையில், அவர் தொடர்பாக, நிதீஷ் என்பவர் ஒரு தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுருந்தார். அதில், ``2015-இல் எஃப்டிஐஐ கல்வி நிறுவனத்தின் அப்போதைய இயக்குநர் பிரசாந்த் பாத்ராபே, பாயல் கபாடியா என்ற மாணவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தார்.

'பாயல் வகுப்புகளை புறக்கணித்தார்; கல்வி நிறுவனத்துக்கு எதிராக 4 மாத கால போராட்டத்திற்கு தலைமை தாங்கினார்' என்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், பாயலுக்கு கிடைக்கக்கூடிய உதவித்தொகையையும் குறைத்தார்கள்.

ஆனால் இப்போது இதே பாயல் கேன்ஸில் சிறந்த ஆவணப்படத்திற்கான விருதை வென்றுள்ளார். பலர் ஏற்கெனவே சுட்டிக்காட்டியுள்ளபடி, பாயலின் கேன்ஸ் வென்ற ஆவணப்படம் 'எ நைட் ஆஃப் நோட்டிங் நத்திங்' போராட்டங்களை பிரதிபலிக்கிறது" என்று பதிவிட்டு இருந்தார்.

2015 காலகட்டத்தில் கஜேந்திர சவுகான் என்பவர் எஃப்.டி.ஐ.ஐ.யின் தலைவராக நியமிக்கப்பட்டபோது போராட்டங்கள் எழுந்தது. அப்போது பாயல் கபாடியா மாணவர் போராட்டங்களின் ஒரு பகுதியாக இருந்தார். இந்தப் போராட்டம் பின்னர் பல மாதங்கள் நீடித்தது. இதனால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த விவரத்தை தான் ட்விட்டரில் பதிவாக இட்டிருந்தார் நிதீஷ்.

இந்தப் பதிவை டேக் செய்த 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்திற்காக ஆஸ்கர் விருதை வென்ற ரெசூல் பூக்குட்டி, எஃப்டிஐஐயில் தான் பயின்றுபோது நடந்த அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.

"நான் இறுதியாண்டு படித்தபோது கல்லூரி தனியார் மயமாக்கப்படுவதை எதிர்த்து போராடியதற்காக எனக்கு கிடைக்க வேண்டி இருந்த ரூ.500 உதவித்தொகையும் மத்திய அமைச்சகத்தால் மறுக்கப்பட்டது. அப்போது நான் மிகவும் மனம் உடைந்துவிட்டேன். ஏனென்றால் அதுதான் என்னுடைய ஒரே ஆதாரமாக அப்போது இருந்தது.

இது மற்ற மாணவர்கள் அனைவருக்கும் தெரியும். எனவே மாணவர்களே, இந்த பரந்த மற்றும் மாறுபட்ட தேசத்தின் மனசாட்சியாளர்களாக இருங்கள்" என்று பதிவிட்டு இருக்கிறார்.

இந்த உரையாடல்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com