‘தலைவி‘ படத்துக்கு தடை இல்லை: ஜெ.தீபாவின் மனு தள்ளுபடி

‘தலைவி‘ படத்துக்கு தடை இல்லை: ஜெ.தீபாவின் மனு தள்ளுபடி
‘தலைவி‘ படத்துக்கு தடை இல்லை: ஜெ.தீபாவின் மனு தள்ளுபடி

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டுள்ள தலைவி, ஜெயா, குயின் ஆகியவற்றிற்கு தடை விதிக்கக்கோரி ஜெ.தீபாவின் மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றின் அடிப்படையில் தமிழில் தலைவி என்ற பெயரில் இயக்குனர் ஏ.எல்.விஜய், இந்தியில் ‘ஜெயா‘ என்ற பெயரில் ஹைதரபாத்தை சேர்ந்த விஷ்ணுவர்தன் இந்தூரி ஆகியோர் திரைப்படமாக எடுத்து வருகின்றனர். இதேபோல, ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் குயின் என்ற இணையதள தொடரை இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் எடுத்து, முதல் பகுதியை வெளியிட்டுள்ளார்.

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படங்களுக்கும், இணையதள தொடருக்கும் தடை விதிக்கக்கோரி ஜெயலலிதாவின் வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள ஜெ.தீபா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். அவர் உத்தரவில், தலைவி, ஜெயா மற்றும் குயின் ஆகியவற்றை வெளியிட தடைவிதிக்க மறுத்து உத்தரவிட்டார்.

மேலும், படம் முழுக்க கற்பனையானது என படத்திற்கு முன்பாக கார்ட் வெளியிட உத்தரவிட்டிருந்தார். தடை விதிக்க மறுத்த உத்தரவை எதிர்த்து ஜெ.தீபா தொடர்ந்த மேல்முறையீடு மனு, நீதிபதிகள் சுப்பையா, சத்திகுமார் சுகுமார குரூப் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தீபா தரப்பில் படங்களில் தங்களுடைய குடும்பத்தினர் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும், படத்தை வெளியிடுவதற்கு முன்பாக தனக்கு போட்டுக்காட்டி ஒப்புதல் பெற உத்தரவிட வேண்டுமென வாதிடப்பட்டது.

தலைவி பட இயக்குனர் ஏ.எல்.விஜய் தரப்பில் தலைவி என்ற புத்தகத்தின் அடிப்படையிலேயே இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், தீபாவிடம் ஒப்புதல் வாங்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவிக்கப்பட்டது. மேலும், பொதுத் தளங்களில் வெளியான தகவலின் அடிப்படையிலேயே இந்த கதை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஜெயலலிதாவை நல்ல முறையிலேயே சித்தரித்து உள்ளதாகவும், எதிர்கால சந்ததியினர் அவரைப் பற்றி தெரிந்துகொள்ளும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

கௌதம் வாசுதேவ் மேனன் தரப்பில் படத்தை சென்சார் போர்டு பார்த்து தணிக்கை செய்யும் என்றும், இந்த படத்திற்கு தடை கேட்க தீபாவுக்கு எந்த ஒரு உரிமையும் கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டது. வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்திருந்த நிலையில், நீதிபதிகள் இன்று பிறப்பித்த தீர்ப்ப்ல், தலைவி, குயின், ஜெயா ஆகியவற்றை வெளியிட தடை விதிக்க முடியாது என கூறி தீபாவின் மனுவை தள்ளுபடி செய்து, தனி நீதிபதி தீர்ப்பை உறுதுசெய்தும் தீர்ப்பளித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com