மெசேஜ்களால் குவிந்த செல்போன்: நடிகர் மாதவன் இன்ப அதிர்ச்சி!
சமீப காலமாக தனது மொபைல்போன் வாழ்த்து மெசேஜ்களால் நிரம்புகிறது என்று நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார்.
திரவ எரிபொருளை பயன்படுத்தி ராக்கெட் வடிவமைத்த இஸ்ரோ குழுவின் முக்கியமான விஞ்ஞானி நம்பி நாராயணன். அவர் பணத்திற்காக ராக்கெட் ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக 1994ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். விசாரணை என்ற பெயரில் நம்பி நாராயணனை காவல்துறையினர் கொடுமைப்படுத்தியதாக புகார் எழுந்தது.
பின்னர், நம்பி நாராயணன் மீதான வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. விசாரணையின் முடிவில் அவர் மீது எந்தக் குற்றமும் இல்லை என நிரூபிக்கப்பட்டு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். மீண்டும் இஸ்ரோவில் சேர்ந்த அவருக்கு முக்கிய பொறுப்புகள் ஏதும் கொடுக்கப் படவில்லை. அதனால், 2001ஆம் ஆண்டு பணியிலிருந்து நம்பி நாராயணன் ஓய்வு பெற்றார்.
தன்னை பொய்யான குற்றச்சாட்டின் கீழ் வழக்கில் சிக்க வைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், திறமையை முடக்கும் வகையில், தன்னையும், தன் குடும்பத்தினரையும் அவமானப்படுத்திய காவல்துறை உயரதிகாரிகள் சிபி மேத்யூஸ், விஜயன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு நம்பி நாராயணன் சட்டப்போராட்டம் நடத்தி வந்தார்.
அதன் பயனாக உச்சநீதிமன்றம், நம்பி நாராயணனுக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. மேலும், அவர் மீது தொடரப்பட்ட வழக்கு மற்றும் சட்டவிரோதமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஜெயின் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைத்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் இவரது வாழ்க்கை கதை சினிமாவாக இருக்கிறது. தற்போது வாழ்க்கை வரலாற்று சினிமா தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை கதையும் சினிமாவாக்கப்படுகிறது. நம்பி நாராயணனாக மாதவன் நடிக்கிறார். மூன்று விதமான லுக்கில் அவர் தோன்றுகிறார். சமீபத்தில் இதன் டீசர் வெளியிடப்பட்டது.
அதில், ’ராக்கெட் வாழ்க்கையில் 35 வருஷமும் ஜெயில்ல 50 நாளும் வாழ்ந்திருக்கேன். அந்த 50 நாள்ல சிறையில் இருந்த போது நாட்டுக்கு ஏற்பட்ட ஈடு செய்ய முடியாத இழப்பு பற்றி பேசறது தான் இந்தப் படத்தின் கதை’ என்று நம்பி நாராயணனாக நடிக்கும் மாதவன் கூறுகிறார். அதனால் இது விஞ்ஞானி நம்பி நாராயணனின் முழு வாழ்க்கையை சொல்லும் கதை இல்லை என்று தெரிகிறது.
இந்நிலையில் சமீபகாலமாக தனது செல்போன் மெசேஜ்களால் நிரம்புகிறது என்றும் இது எனக்கு இன்ப அதிர்ச்சி என்றும் என்றும் நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி மாதவன் மேலும் கூறும்போது, ’திடீரென்று சமீபகாலமாக அதிகமான மெசேஜ்கள் என் மொபைலுக்கு வருகின்றன. இவை எனக்கு முதலில் அதிர்ச்சி அளித்தன. எதற்கு இத்தனை மெசேஜ்கள் என்று. அவை என்னை வாழ்த்தி அனுப்பப்பட்டவை என்று பிறகு புரிந்துகொண் டேன். இந்த வாழ்த்துக்கு காரணம், விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை கதையான ’ராக்கெட்ரி, நம்பி நாராயணன் விளைவு’ படத்தில் நடிப்பதுதான். இதன் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
ஆனந்த் மகாதேவனுடன் இணைந்து நானும் இந்தப் படத்தை இயக்குவதால் கடினமான வேலை இருக்கிறது. வரும் ஏப்ரல் மாதம் சென்னை யில் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது. இதில் எனக்கு ஹீரோயின் கிடையாது. இந்தக் கதையில் அதற்கான வாய்ப்பு இல்லை. இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் படம் உருவாகிறது’ என்றார்.