சிறுவயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன்: நிவேதா பெத்துராஜ்
சிறுவயதில் தானும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியதாக நடிகை நிவேதா பெத்துராஜ் தெரிவித்துள்ளார்.
நடிகை நிவேதா பெத்துராஜ் தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் “ நாட்டில் நிறைய பிரச்னைகள் சென்று கொண்டிருக்கிறது. அதில் ஒருசில பிரச்னைகளை நம்மால் கட்டுப்படுத்த முடியும். அதில் ஒன்றுதான் பெண்கள் பாதுகாப்பு. இந்த வீடியோவை பார்க்கும் நிறைய பெண்களும் சரி, ஆண்களும் சரி சிறு வயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருப்பார்கள். நான் உள்பட. 5 வயதில் நடக்கும் ஒன்றை நான் எப்படி அம்மா.. அப்பாவிடம் சென்று விவரிப்பேன்? எனக்கு அப்போது என்ன நடந்தது என எதுவும் தெரியாது..? பொதுவாக இதுபோன்ற பாலியல் துன்புறுத்தல் எல்லாம் வெளிஆட்கள் மூலம் நடப்பதில்லை. நமக்கு தெரிந்த உறவினர்கள், பக்கத்துவீட்டுக்காரர்கள் மூலமாகத் தான் நடக்கும். எனவே எல்லா பெற்றோர்களும் தயவு செய்து பொறுப்புடன் இருங்கள். உங்கள் குழந்தையின் முன் அமர்ந்து பேச ஆரம்பியுங்கள். யாரு எப்படி பேசினால் தப்பு.?. எப்படி தொட்டால் தப்பு..? என இரண்டு வயதில் இருந்தே பேச ஆரம்பியுங்கள். குழந்தைகளுக்கு பள்ளியில் என்ன நடக்கிறது என தெரியாது. டியூசனில் என்ன நடக்கிறது என தெரியாது. எனவே சிறுவயதில் இருந்தே பாதுகாப்பு குறித்து சொல்லிக் கொடுங்கள். ஒவ்வொரு தெருவில் வசிக்கும் ஆண் நண்பர்களும் ஒரு எட்டு பத்து பேராக குழுவாக இணைந்துகொள்ளுங்கள். அதில் தினமும் இரண்டு பேர் உங்கள் தெருவில் என்ன நடக்கிறது என கண்காணியுங்கள். அப்போது சில தவறுகள் நடந்தால் நீங்களே கண்டுபிடிக்கலாம். அதனை தட்டியும் கேட்கலாம். மொத்தமாக நாம் போலீஸை நம்பியே இருக்க முடியாது. தற்போது எனக்கு வெளியே சென்றாலே பயமாக இருக்கிறது. யாரை பார்த்தாலும் சந்தேகத்துடன் பார்க்க தோன்றுகிறது. பாலியல் துன்புறுத்தல் மிக தவறானது. இதனை அழித்தால் நாம் ஒரு அமைதியான இடத்தில் வாழலாம்” என்றார்.
ஜம்மு- காஷ்மீர் கத்துவாவில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சிறுமிக்கு நீதி கேட்டு பலரும் தங்களது கண்டனக் குரல்களை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் நிவேதா பெத்துராஜ் இந்த வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.