மலையாள சினிமாவில் நிறவெறி: நைஜீரிய நடிகர் பரபரப்பு புகார்!
மலையாள சினிமாவில் நிறவெறியால் பாதிக்கப்பட்டேன் என்று ‘சுடானி ப்ரம் நைஜீரியா’ (Sudani from Nigeria) என்ற மலையாளப் படத்தில் நடித்த நைஜீரிய நடிகர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் கடந்த வாரம் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘சுடானி ப்ரம் நைஜீரியா’. சக்ரியா முகமது என்கிற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சவுபின் சாகீர் மற்றும் நைஜீரியாவை சேர்ந்த சாமுவேல் அபியோலா ராபின்சன் (Samuel Abiola Robinson) ஆகியோர் ஹீரோக்களாக நடித்துள்ளனர். படத்தை சமீர் தாஹீர் மற்றும் ஷைஜூ காலித் ஆகியோர் தயாரித்துள்ளனர். ஆப்பிரிக்காவை சேர்ந்த கால்பந்து வீரர் கேரளாவில் ஒரு கிளப்பில் வந்து விளையாடும்போது ஏற்படும் அனுபவங்கள்தான் கதை. இந்த படத்தில் நடித்த சாமுவேல் ராபின்சனுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இதைய டுத்து இவர் கேரளாவில் பல்வேறு இடங்களில் நடந்த பாராட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் சாமுவேல் ராபின்சன் தனது நாட்டிற்கு திரும்பினார். அங்கு பேஸ்புக்கில் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார்.
அதில், ‘சுடானி ப்ரம் நைஜீரியா’ மலையாள படத்தில் நடித்தபோது கடுமையாக நிறவெறியால் பாதிக்கப்பட்டேன். கருப்பு இனத்தை சேர்ந்த எனக்கு சக நடிகர்களை விட குறைவான சம்பளத்தைத் தான் தயாரிப்பாளர்கள் கொடுத்தனர். அடுத்த தலைமுறையை சேர்ந்த கருப்பு இனத்தவர் என்னை போன்று பாதிக்ககூடாது என்று இப்பிரச்னையை கூறுகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார். இது மலையாள சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.