’உள்ளாடைகளை கழற்றச் சொல்லி சோதனையா..? கொந்தளித்த சின்மயி..!

’உள்ளாடைகளை கழற்றச் சொல்லி சோதனையா..? கொந்தளித்த சின்மயி..!
’உள்ளாடைகளை கழற்றச் சொல்லி சோதனையா..? கொந்தளித்த சின்மயி..!

நீட் தேர்வு கட்டுப்பாடுகளை எதிர்த்து பாடகி சின்மயி கடுமையாக சாடியுள்ளார்.

நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் கடந்த 6ம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. தமிழக மாணவர்களும் பல்வேறு சிரமங்களை சந்தித்துதான் நீட் தேர்வை எழுதி முடித்தனர். தேர்வு எழுதச் சென்ற மாணவர்களை சோதனை என்ற பெயரில் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கியதாகவும் புகார் எழுந்தது. நீட் தேர்வெழுதிய கேரள மாணவி ஒருவர், சோதனை என்ற பெயரில் தனது உள்ளாடையை அகற்ற அதிகாரிகள் நிர்பந்தித்தாகவும் புகார் கூறினார். இதுகுறித்து மாணவி சார்பில் காவல்துறையிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் “ சோதனையின்போது மேல் உள்ளாடைகளை கழற்றுமாறு சோதனையாளர்கள் கூறினார்கள். எனது ஆடையில் மெட்டல் இருப்பதாக அதிகாரிகள் சந்தேகித்தார்கள். எனக்கு உள்ளாடையை கழற்ற ஒருமாதிரியாக இருந்தது. பின்னர் கழற்றினேன்” என கூறியுள்ளார்.

இந்நிலையில் நீட் தேர்வு கட்டுப்பாடுகளை எதிர்த்து பாடகி சின்மயி கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “ நீட் தேர்வு சோதனைகள் மிகவும் அபத்தமானதாக இருக்கிறது. நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவிகள் பல்வேறு விஷயங்களுக்கு மத்தியில் மெட்டல் கொக்கி இல்லாத உள்ளாடைகளையும் தேடி கண்டுபிடிக்க வேண்டும். இது ஏன் என விளங்கவில்லை. பீகார் போன்ற மாநிலங்களில் மாணவர்கள் செய்யும் மோசடி தான் இந்த அபத்தமான சோதனைக்கு காரணம் என கருதுகிறேன். அந்த மாணவர்களை மட்டுமே முன் உதாரணமாக வைத்து இவர்கள் அனைத்து மாணவிகளின் உள்ளாடைகளையும் கூட சோதனை செய்ய முடிவு செய்துள்ளனர். மோசமான சிபிஎஸ்இ நிர்வாகம். கடந்தகால மோசமான தேர்வு மோசடிகளை வைத்துக்கொண்டு செயல்படுகின்றனர்” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com