‘நெற்றிக்கண்’ படத்திற்காக நயன்தாரா மேக்கப் இல்லாமல் நடித்தார்: இயக்குநர் மிலிந்த் ராவ்

‘நெற்றிக்கண்’ படத்திற்காக நயன்தாரா மேக்கப் இல்லாமல் நடித்தார்: இயக்குநர் மிலிந்த் ராவ்
‘நெற்றிக்கண்’ படத்திற்காக நயன்தாரா மேக்கப் இல்லாமல் நடித்தார்: இயக்குநர் மிலிந்த் ராவ்


”’நெற்றிக்கண்’ படத்திற்காக நயன்தாரா மேக்கப் இல்லாமல் நடித்தார்” என்று படத்தை இயக்கிய அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார் இயக்குநர் மிலிந்த் ராவ்.

கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான ‘அவள்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் மிலிந்த் ராவ், நயன்தாராவை வைத்து ‘நெற்றிக்கண்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். விக்னேஷ் சிவன் தயாரித்துள்ள இப்படத்தில் பார்வை மாற்றுத்திறனாளி பெண்ணாக நடித்துள்ள நயன்தாரா, பார்வை குறைபாடு இருந்தாலும் தனது அறிவாற்றலால் கொடூரமான சைக்கோ கில்லரை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதே கதைக்களம்.

இன்று மதியம் 12.15 மணிக்கு ‘நெற்றிக்கண்’ நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகியுள்ளது. கலவையான விமர்சனங்களைப் பெற்றுவரும் நிலையில், இப்படத்தை இயக்கிய அனுபவம் குறித்து இயக்குநர் மிலிந்த் ராவ் பேசும்போது, “எங்கள் திரைப்படத்திற்கு இது வரையிலும் கிடைத்து வரும், அற்புதமான வரவேற்பு பெரும் மகிழ்ச்சியையும் குழுவிலுள்ள அனைவருக்கும் பெரிய உற்சாகத்தையும் தந்துள்ளது. இதன் அனைத்து பெருமையும் நயன்தாராவையேச் சேரும். இப்படத்தில் அவரது உழைப்பு, நம்பமுடியாத அளவு பிரமிப்பானதாக இருந்தது. நயன்தாரா பார்வையற்றவராக நடிப்பதால், பார்வையற்றோரிடமிருந்து நிறைய குறிப்புகளைப் பெற்று படத்தில் பயன்படுத்தினோம். தயாரிப்பாளராக இருந்தபோதிலும், நயன்தாரா இந்த கதாபாத்திரத்தில் பொருந்துகிறாரா என்று சோதனை படப்பிடிப்பை நடத்த விரும்பினார். அதன்படி, அவரை வைத்து டெஸ்ட் ஷூட் செய்தோம். அவரது உடல்மொழி பார்வையற்ற ஒருவரை போலவே இருந்தது.

மேலும், இப்பாத்திரத்தில் மேக்கப்பே இல்லாமல் நடித்துள்ளார். இத்தனை பெரிய பிரபலமாக இருந்தாலும் இந்த கதாப்பாத்திரத்திற்கு அவர் தந்த உழைப்பு அபாரமானது. மிக கச்சிதமாக, நுணுக்கத்துடன் இந்த பாத்திரத்தை அவர் செய்துள்ளார். பார்வையற்ற பாத்திரம் என்றவுடனேயே இந்த பாத்திரம் எல்லாப்படத்தையும் போல, கருப்பு கண்ணாடி மாட்டி நடமாடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தோம்.

கண்கள் தான் உணர்வுகளை வெளிப்படுத்தும் கருவி. அதனை முழுதாக வெளிப்படுத்த வேண்டும், என்பதில் உறுதியாக இருந்தோம். படப்பிபிடிப்பில் எளிதாக கவனம் சிதறும். ஆனால், அனைத்து தடைகளையும் உடைத்து, நயன்தாரா கண் தெரியாத ஒருவரை திரையில் அற்புதமாக கொண்டு வந்திருக்கிறார்.

நீண்ட பொதுமுடக்கம் முடிந்த பிறகு நாங்கள் மீண்டும் படப்பிடிப்புக்கு வந்தபோது, 'இதுவும் கடந்து போகும்' பாடலுக்காக நயன்தாரா அதிக எடையைக் குறைத்ததைக் கண்டு, ஒட்டுமொத்த குழுவும் வியந்தது. மக்கள் அவரை லேடி சூப்பர்ஸ்டாராக கொண்டாடுவது அவருக்கு பொருத்தமே. இப்படத்தில் பணியாற்றியது மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது” என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com