”ஆலியாவுக்கு பணம்தான் எல்லாம்..”- நீண்ட நெடிய தன்னிலை விளக்கம் கொடுத்த நவாசுதீன் சித்திகி!

”ஆலியாவுக்கு பணம்தான் எல்லாம்..”- நீண்ட நெடிய தன்னிலை விளக்கம் கொடுத்த நவாசுதீன் சித்திகி!
”ஆலியாவுக்கு பணம்தான் எல்லாம்..”- நீண்ட நெடிய தன்னிலை விளக்கம் கொடுத்த நவாசுதீன் சித்திகி!

இந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத நட்சத்திரமாக இருக்கக் கூடியவர் நவாசுதீன் சித்திகி. சினிமாவில் கோலோச்சிக் கொண்டிருந்தாலும், அவரது தனிப்பட்ட வாழ்க்கை அண்மை காலமாக பொதுவெளியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

குறிப்பாக நவாசுதீன் சித்திகியும் அவரது தாயாரும் தன்னை கொடுமை செய்வதாக மனைவி ஆலியா தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார். நவாசுதீன், ஆலியா இடையேயான விவாகரத்து பிரச்னை நீண்ட காலமாக இருந்து வந்த நிலையில், துபாயில் இருந்த இவர்களது குழந்தைகள் இருவரும் இந்தியாவுக்கு வந்ததால் அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை எனக் கூறி மும்பை நீதிமன்றத்தின் நவாசுதீன் வழக்கு தொடர்ந்திருந்ந்தார்.

அப்போது குழந்தைகள் ஆலியா வசம் இருப்பதாகவும், இந்தியாவிலேயே தங்கி படிக்க விரும்புவதாகவும் ஆலியாவின் வழக்கறிஞர் கூறியிருக்கிறார். இதற்கடுத்தபடியாக நவாசுதீன் வீட்டுக்குக்குள் தன்னை அடைத்து வைத்து, சாப்பாடு கொடுக்காமல், பாத்ரூம் கூட போக விடாமல் சித்ரவதை செய்வதாக நவாசுதீன் மீதும், அவரது தாயார் மெஹ்ரூனிஷா மீதும் ஆலியா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இப்படியாக இந்த விவகாரம் செல்ல, அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நள்ளிரவில் தன்னையும் தனது குழந்தைகளையும் நவாசுதீன் வீட்டைவிட்டு வெளியேற்றிவிட்டார் எனச் சொல்லி, ஆலியா நீண்ட பதிவு கொண்ட வீடியோவை பகிர்ந்திருந்தார். இதனால் இந்த விவகாரம் பூதாகரமானதை அடுத்து தற்போது தன்னிலை விளக்கம் கொடுக்கும் வகையில் முதல் முறையாக நடிகர் நவாசுதீன் சித்திகி நீண்ட அறிக்கையினை வெளியிட்டிருக்கிறார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதன் விவரத்தை காணலாம்:

“நான் அமைதியாக இருப்பதால் எல்லா இடத்திலும் என்னை கெட்டவனாக பாவிக்கிறார்கள். இந்த கேலி கூத்துகளையெல்லாம் என் சிறு பிள்ளைகள் படித்துவிடுவார்கள் என்பதால் அமைதி காத்தேன். சூழ்ச்சி செய்யப்பட்ட வீடியோக்கள் மற்றும் ஒரு தரப்பினரின் பேச்சுகள் எல்லாம் சமூக வலைதளங்கள், ஊடகங்கள் மற்றும் சிலரெல்லாம் என்னுடைய பெயர் களங்கப்படுவதை ஆர்வமாக பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

"முதலில் நானும் ஆலியாவும் பல ஆண்டுகளாக ஒன்றாக இருக்கவில்லை. நாங்கள் ஏற்கனவே விவாகரத்து செய்துள்ளோம். ஆனால் எங்களுடைய குழந்தைகளுக்கான எங்களுக்குள் ஒரு புரிந்துணர்வு இருந்தது.

என் குழந்தைகள் ஏன் இந்தியாவில் இருக்கிறார்கள்? அவர்கள் ஏன் 45 நாட்களாக பள்ளிக்கு செல்லவில்லை? அந்த வேளையில் தினந்தோறும் பள்ளியில் இருந்து அவர்கள் வராததற்கான காரணம் கேட்டு எனக்கு கடிதம் அனுப்புவது குறித்து எவருக்காவது தெரியுமா?

கடந்த 45 நாட்களாக என் குழந்தைகள் பிணை கைதிகளாக வைக்கப்பட்டிருக்கிறார்கள். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு துபாயில் குழந்தைகளை தவிக்கவிட்டு விட்டு, இங்கு வந்து பணம் கேட்டார். மாதந்தோறும் 10 லட்சம் ரூபாய் என கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆலியாவுக்கு கொடுத்திருக்கிறேன். மேலும் துபாய்க்கு எனது குழந்தைகளுடன் சென்ற போது பள்ளிக்கட்டணம், மருத்துவம் மற்றும் சுற்றுலா என இதர செலவுகள் இல்லாமல் மாதாமாதம் 5 முதல் 7 லட்சம் ரூபாய் வரை பெற்றிருக்கிறார்.

என் குழந்தைகளின் தாய் என்பதால் அவருடைய வருமானத்துக்கான பல கோடி ரூபாய் செலவில் அவரது படங்களுக்கும் நிதி கொடுத்திருக்கிறேன். என் குழந்தைகளுக்காக ஆலியாவுக்கு ஆடம்பர கார்களை வாங்கிக் கொடுத்தேன். ஆனால் அதனை விற்று பணத்தை தானே செலவழித்திருக்கிறார்.
எனது குழந்தைகளுக்காக மும்பையின் வெர்சோவாவில் ஆடம்பரமான அடுக்குமாடி குடியிருப்பையும் வாங்கியுள்ளேன். எனது குழந்தைகள் சிறியவர்கள் என்பதால் ஆலியா அந்த அடுக்குமாடி குடியிருப்பின் இணை உரிமையாளராக ஆக்கப்பட்டார். எனது பிள்ளைகளுக்கு துபாயில் ஒரு வாடகை குடியிருப்பைக் கொடுத்துள்ளேன். அங்கும் ஆலியாவும் வசதியாகவே வாழ்ந்து வந்தார்.

ஆலியாவுக்கு அதிக பணம் மட்டுமே தேவையாக இருக்கிறது. அதனால் என் மீதும் என் அம்மா மீதும் பல வழக்குகளை தொடுத்திருக்கிறார். இதுதான் அவருடைய வாடிக்கையான செயலாக இருக்கிறது. கடந்த காலத்திலும் இதையேதான் செய்தார். இப்படியாக அவருடைய கோரிக்கையை ஏற்று பணம் கொடுத்ததும் வழக்கை வாபஸ் பெற்று விடுவார்.

விடுமுறை சமயத்தில் என் குழந்தைகள் இந்தியா வரும்போதெல்லாம், அவர்கள் தங்கள் பாட்டியுடன் மட்டுமே தங்குவார்கள்.
அப்படி இருக்கும் போது, என் குழந்தைகளை எப்படி அவர்களது பாட்டியே வீட்டை விட்டு வெளியேற்ற முடியும்? ஆலியா குற்றஞ்சாட்டிய சம்பவத்தின் போது நான் வீட்டில் இல்லை. இருப்பினும் ஏன் வெளியேற்றும் போது வீடியோ எடுக்கவில்லை? அதை தவிர்த்து மற்ற விஷயங்களை வீடியோ எடுக்கிறார்.

தன்னுடைய இந்த நாடகத்தில் குழந்தைகளையும் ஆலியா இழுத்திருக்கிறார். இதையெல்லாம் என்னை மிரட்டுவதற்காகவும், என்னுடைய பெயரை கெடுப்பதற்காகவும், அவருடைய முறையற்ற கோரிக்கையை நிறைவேற்றிக்கொள்ளவே செய்கிறார்.

கடைசியாக ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இந்த உலகில் எந்த பெற்றோரும் தங்கள் குழந்தைகள் படிப்பை தவற விடுவதையோ அல்லது அவர்களது எதிர்காலத்தைத் தடுக்கவோ விரும்ப மாட்டார்கள். பெற்றோர்கள் எப்போதும் தன்னால் முடிந்தவற்றையே வழங்க முயற்சிப்பார்கள்.

நான் சம்பாதிப்பதெல்லாம் என் இரு குழந்தைகளுக்குதான், இதை யாராலும் மாற்ற முடியாது. நான் ஷோரா & யானியை நேசிக்கிறேன், அவர்களின் நல்வாழ்வையும் எதிர்காலத்தையும் பாதுகாக்க நான் எந்த எல்லைக்கும் செல்வேன். இதுவரை நடந்த அனைத்து வழக்குகளிலும் வெற்றி பெற்று, நீதிமன்றம் மீது தொடர்ந்து நம்பிக்கை வைத்திருக்கிறேன்.

அன்பு என்பது ஒருவரைத் தடுத்து நிறுத்துவது அல்ல. அவர்களை சரியான திசையாக பார்த்த பறக்கச்செய்வதே ஆகும். நன்றி”

இவ்வாறு நவாசுதீன் சித்திகி குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com