நடிகையின் புகார் குறித்து சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன் என்று இந்தி நடிகர் நானா படேகர், நடிகர் சங்கத்துக்கு அளித்து விளக்கத்தில் கூறியுள்ளார்.
தமிழில் ’பொம்மலாட்டம்’, ’காலா’ படங்களில் நடித்தவர் இந்தி நடிகர் நானா படேகர். இவர் மீது, நடிகை ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை கூறியிருந்தார். ‘2008-ஆம் ஆண்டு 'ஹார்ன் ஓகே ப்ளீஸ்' என்ற இந்தி படத்தின் பாடல் காட்சிகள் படமாக்கப்படும் போது, நானா படேகர் பாலியல் தொல்லை தந்தார். ஹீரோயின் மட்டுமே இடம்பெறக்கூடிய அந்த பாடலில் வலுக்கட்டாயமாக உள்ளே நுழைந்த அவரை நான் கண்டித்த போது, ’எனக்கு பிடித்ததை செய்வேன், என்னை யாரும் தட்டிக் கேட்க முடியாது’ என்று சத்தமாகச் சொன்னார்.
நானா படேகரின் இந்த செயலுக்கு படக் குழுவினர் ஆதரவாக செயல்பட்டனர். இதுகுறித்து நான் வெளியே கூறியதால் நானா படேகர் ஆதரவாளர்களின் மிரட்டலுக்கு ஆளானேன். என் குடும்பத்தினரோடு காரில் சென்ற போது அவரது ஆதரவாளர்களால் தாக்கப்பட்டோம்’ என கூறி இருந்தார்.
இதை அந்தப் படத்தில் பணியாற்றிய நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா மறுத்திருந்தார். இவர், தமிழில் ஜீவாவின் ’ரவுத்திரம்’ படத்தில் நடித்தவர். ‘கணேஷ் பொய்யர். அவர் இரண்டு முகம் கொண்ட மனிதர். பத்துவருடத்துக்கு முன் எனக்கு நடந்த அந்த பாலியல் தொல்லை சம்பவத்துக்கு உடந்தையாக இருந்தவர் அவர்’ என்று அவருக்கு பதில் கூறியிருந்தார் அந்த நடிகை. இந்நிலையில் இந்தப் புகாரை மறுத்த நானா படேகர், இது பொய்யான புகார். அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லை என்றால் வழக்குத் தொடர்வேன் என்று கூறியிருந்தார். அதன்படி நோட்டீஸும் அனுப்பினார்.
இந்திய திரையுலக பிரபலங்கள் பலர் அந்த நடிகைக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். அவரை போலீஸில் புகார் கொடுக்கு மாறு கூறினர். இதையடுத்து நடிகை, ஓஸிவாரா போலீஸ் ஸ்டேஷனில் நானா படேகர், நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார் யா மீது புகார் செய்தார்.
இந்நிலையில் நடிகையின் புகார் குறித்து விளக்கம் அளிக்குமாறு, சினிமா மற்றும் டிவி நடிகர்கள் சங்கம், நானா படேகருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு பதில் அனுப்பியுள்ள நானா படேகர், ’அந்த குற்றச்சாட்டு பொய்யானவை, ஆதாரமற்றவை, தவறானவை. இதுபற்றி நான் சட்ட நடவடிக்கைகளை எடுத்துவருகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.