“சரியா தலை வாரியிருக்கலாம்; ட்ரெஸ் நல்லா பண்ணியிருக்கலாம்”- விஜய் குறித்து ஜேம்ஸ் வசந்தன்!

“சரியா தலை வாரியிருக்கலாம்; ட்ரெஸ் நல்லா பண்ணியிருக்கலாம்”- விஜய் குறித்து ஜேம்ஸ் வசந்தன்!
“சரியா தலை வாரியிருக்கலாம்; ட்ரெஸ் நல்லா பண்ணியிருக்கலாம்”- விஜய் குறித்து ஜேம்ஸ் வசந்தன்!

‘வாரிசு’ பட விழாவில், நடிகர் விஜய் வந்த விதம் குறித்து பிரபல இசையமைப்பாளரான ஜேம்ஸ் வசந்தன் தனது சமூகவலைத்தளப்பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளார்.

தொலைக்காட்சி தொகுப்பாளரான ஜேம்ஸ் வசந்தன், சசிகுமாரின் ‘சுப்ரமணியபுரம்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அந்தப் படத்தின் பாடல்கள் எல்லாம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக, தொடர்ந்து ‘நாணயம்’, ‘பசங்க’, ‘ஈசன்’ உள்ளிட்ட பலப் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், விஜய் நடிப்பில் வருகிற 12-ம் தேதி வெளியாகவுள்ள ‘வாரிசு’ படத்தின் இசை வெளியீட்டு விழா, கடந்த வாரம் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு நடிகர் விஜய் மிகவும் எளிமையாக வந்தது முதல், அவர் சொன்ன குட்டி ஸ்டோரி உள்பட பல நிகழ்வுகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகின.

இந்த விழாவின் தொகுப்பு நேற்று தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான நிலையில், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், விஜய்யின் உடை மற்றும் அவர் வந்திருந்த விதம் குறித்து தனது ஃபேஸ்புக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

விஜய்யின் தோற்றம் நெருடலாக இருந்தது:

அதில், “'வாரிசு' பட விழா தொலைக்காட்சியில் போய்க்கொண்டிருந்தது. தற்செயலாக ஒரு கணம் எட்டிப்பார்த்தேன். விஜய் பேசிக்கொண்டிருந்தார். முதல் பார்வையிலேயே அவர் தோற்றம் மனதைச் சற்று நெருடியது.

தலையை இன்னும் கொஞ்சம் சீர்படுத்தி, தாடியைக் கொஞ்சம் நெறிப்படுத்தி, இந்த பிரம்மாண்ட விழாமேடைக்கேற்ற உடையணிந்திருக்கலாம் என்று தோன்றியது.

அது எளிமை என்று அவர் நினைத்திருக்கலாம்; அல்லது அவர் ரசிகர் வாதிடலாம். Simplicity and appropriateness are two different things. எளிமையும், அவைப் பொருத்தமும் வெவ்வேறு விஷயங்கள். இதைப் பொதுவாகத்தான் சொல்கிறேன்.

நாம் ஒரு வேலைக்கு, நேர்முகத் தேர்வுக்கு போகும்போது ஏன் அவ்வளவு பொறுப்பாக பார்த்துப் பார்த்து உடையணிந்து செல்கிறோம்? ஒவ்வொரு இடத்துக்கும் ஏற்ற தோற்ற வரைமுறை உண்டுதானே?.

உச்சபச்ச நடிகர்கள்

ஒரு நடிகனின் ஒவ்வொரு அசைவையும் அப்படியே கிரகிக்கிற, பின்பற்றுகிற பாமர ரசிகர்மேல் கதாநாயகர்கள், அதுவும் விஜய் போன்ற உச்சபச்ச நாயகன் ஏற்படுத்துகிற தாக்கம் அதி தீவிரமானது. தன் திரை நாயகனை அன்றாட வாழ்வில் ஒவ்வொரு அசைவிலும் பிரதிபலிக்கிற கடைநிலை இளைஞனுக்கு சொல்லாமல் சொல்லிக் கொடுக்கவேண்டிய விஷயங்களில் இதுவும் ஒன்று.

எந்த நிகழ்வுக்கு எப்படி உடையணிந்து செல்லவேண்டும் என்பதை அவன் எங்கே போய் கற்றுக்கொள்வான்? சினிமாவும், கிரிக்கெட்டும் உயிர்மூச்சாக ஆகிவிட்ட இந்தியாவில் இத்துறைகளில் உள்ளவர்க்கென்று சில பொறுப்புகள் உள்ளன, நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்.

நீங்கள் திரைப்படங்களில் எல்லாவித ஆடம்பர ஆடைகளையும் அணிந்து சலித்துப்போய் நிஜவாழ்வில் இப்படி எளிமையாக இருக்க விரும்புவதையும் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனாலும் பொதுமேடையாயிற்றே. வெறித்தனமான இளைஞன் உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறானே.

கற்றுக்கொடுங்கள்

ஹாலிவுட்டிலும் பாலிவுட்டிலும், ஆந்திராவிலும் கூட யாருமே இந்த அம்சத்தில் அலட்சியம் காட்டுவதில்லையே. நட்சத்திரங்கள் வசதியானவர்கள் என்பது வெட்ட வெளிச்சந்தானே. யாரும் உங்களைத் தவறாக நினைக்கமாட்டார்கள். தன் நாயகன் அழகாக வந்தால் முதலில் மகிழ்பவன் உங்கள் ரசிகன்தான்!

முறையான அரங்க நிகழ்வுகளில் நன்கு அலங்கரித்து வாருங்கள். விடுமுறைகளில் மனம்போல் அணிந்து மகிழுங்கள். இந்த நடைமுறை வரைமுறைகளை உங்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றும் இளைஞருக்குக் கற்றுக்கொடுங்கள்” என்று தெரிவித்துள்ளார். மேலும், மற்றொரு பதிவில், “ ‘நீங்கள் உணர்வதையெல்லாம் Facebook-ல் எழுதிவிடாதீர்கள், கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள்’ என்று என்னை அவ்வப்போது எச்சரிக்கிற என் மனைவிக்கு இன்னும் இது தெரியாது. என்று தெரியப்போகிறதோ.. என்ன நடக்கப்போகிறதோ!” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com