God Modeல் கம்பேக் கொடுத்தாரா சூர்யா? | கருப்பு விமர்சனம் | Karuppu Review | Suriya | R J Balaji
God Modeல் கம்பேக் கொடுத்தாரா சூர்யா?(2.5 / 5)
நீதியை பெற்றுத்தர கடவுளே களத்தில் இறங்கினால்... அதுவே கருப்பு ஒன்லைன்!
ஏழு கிணறு பகுதியில் உள்ள நீதிமன்றத்தில் செல்வாக்கு படைத்த வழக்குரைஞர் பேபி கண்ணன் (ஆர் ஜே பாலாஜி). அந்த நீதி மன்றத்தில் சட்டத்தின் மூலம் நீதி பெற வரும் சாமானியர்களிடம் பணம் பிடுங்குவது, செல்வாக்கு படைத்தவர்களை தண்டனையிலிருந்து காப்பாற்றி பணம் பெறுவது என ஒரு லீகல் கட்டப் பஞ்சாயத்து நடத்துகிறார். இந்த நீதிமன்றத்தில் மகள் பினு (அனகா மாயா ரவி) சிகிச்சைக்காக நகையை விற்க சென்ற இடத்தில், நகையை பறி கொடுக்கிறார் அவளின் தந்தை (இந்திரன்ஸ்). போலீஸ் மூலம் திருடப்பட்ட நகை பிடிக்கப்பட்டாலும், அது நீதி மன்றத்தின் மூலம் திரும்ப வாங்க வேண்டும் என்பது அலுவல். இதற்காக பேபியை நாடுகிறார் பினுவின் தந்தை. ஆனால் அவரிடம் பணம் பிடுங்க நினைக்கும் பேபி அவரை அலைக்கழிக்கிறார். கையறு நிலையில் இருக்கும் பினுவின் தந்தைக்கு உதவியாக இவ்வழக்கில் ஆஜராகிறார் வழக்குரைஞர் சரவணன் (சூர்யா). அதன் பின் நடப்பது என்ன? சரவணன் யார்? என்பதை எல்லாம் மாஸ் + பக்தி கலந்து பரிமாறி இருக்கிறார் ஆர் ஜே பாலாஜி.
நன்மை vs தீமை என்ற தமிழ் சினிமாவின் ட்ரேட் மார்க் மசாலா படத்தை கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி. அதில் மாஸ் மொமண்ட், அதிரடி சண்டைகள், கலர்ஃபுல் விஷுவல் என பலவற்றை கலந்து கட்டி கொடுத்த விதத்தில் ஒரு ஃபெஸ்டிவல் மோட் சினிமா அனுபவத்தை கொடுத்திருக்கிறார்.
லீட் ரோல் ரோலில் கருப்பு (எ) சரவணனாக பக்கா மாஸ் காட்டுகிறார் சூர்யா. கெத்தாக வசனங்கள், எமோஷனல் காட்சி, வெறித்தனமான சண்டை என வின்டேஜ் சூர்யா திரும்ப வந்திருக்கிறார் என்றே சொல்லலாம். ஆனால் நிறைய காட்சிகள் அவர் இல்லாமலே நடப்பதால் ஒரு எக்ஸ்டென்டட் கேமியோ ரோலில் தான் சூர்யா வருகிறார் என்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படுவதை தடுக்க முடியவில்லை. வில்லன் ரோலில் நடித்தாலும், ஹீரோ அளவுக்கு நிறைய காட்சிகளில் வருவது ஆர் ஜே பாலாஜி தான். வழக்கமான நக்கல் வசனங்கள் ஒரு பக்கம், அதில் கொஞ்சம் வில்லனிசம் மறுபக்கம் என கலந்து நடித்திருக்கிறார். இன்னும் கூட அவரது பாத்திரம் அழுத்தமாக இருந்திருக்கலாம்.
ஹீரோயினாக த்ரிஷா கோர்ட் காட்சிகளிலும், சூர்யாவிடம் வரம் கேட்கும் காட்சியிலும் கவனிக்க வைக்கிறார். இந்திரன்ஸ் + அனகா, தந்தை மகளாக படத்தின் எமோஷனல் பகுதிக்கு நடிப்பால் பலம் சேர்க்கிறார்கள். நட்டி நட்ராஜ் ஒரு உப வில்லனாக சிறப்பான நடிப்பை கொடுத்திருந்தார். சின்ன ரோலில் வந்தாலும் ஷிவதா நடிப்பு மிக அழுத்தமாக இருந்தது. இவர்கள் தவிர ஸ்வாசிகா, மாறன், ஜார்ஜ் மரியான், வேலா ராமமூர்த்தி, மன்சூர் அலிகான் ஆகியோர் சின்ன சின்ன வேடங்களில் வந்து போகிறார்கள்.
இப்படத்தின் பல காட்சிகளுக்கு தன் ஒளிப்பதிவின் மூலம் வலு சேர்க்கிறார் ஜி கே விஷ்ணு. மாஸ் காட்சிகள், கோர்ட் ரூம் விவாதங்கள் என எல்லா ஃபிரேம்களையும் கட்சிதமாக கொடுத்திருக்கிறார். `கருப்பு' படத்தின் பேக் போன் இசையமைப்பாளர் சாய் அப்யங்கரின் பின்னணி இசை மற்றும் பாடல்களை சொல்லலாம். மாஸ் காட்சிகளில் எல்லாம் பில்டப் ஏற்றுவதே சாய் தான். விக்ரம் மோர் அமைத்துள்ள இடைவேளை சண்டைக்காட்சி சிறப்பு. படத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகள் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். அவை ஏனோ ரொம்பவும் துருத்திக் கொண்டிருந்தன.
சட்டத்தில் உள்ள நடைமுறைகள் மேல் விமர்சனத்தை வைக்கும் படம், அதே சட்டத்தினால் எவ்வளவோ நன்மைகளை செய்ய முடியும் என்ற நம்பிக்கையையும் பேசுகிறது. கடவுள், பக்தி என படத்தின் ரூட்டை மாற்றாமல் நேர்மைக்கும், தீய எண்ணங்களுக்குமான மோதலாக படத்தை வடிவமைத்த விதமும் பாராட்டுக்குறியது.
தெய்வம் மனித ரூபத்தில் வந்து உதவும் கதையை, தெய்வமே வந்து உதவினால் என மாற்றி படத்தில் ஃபேண்டஸி சேர்த்த ஐடியா நன்று. ஆனாலும் ஒரு அளவுக்கு மேல் அதில் சுவாரசியம் சேர்க்க முடியவில்லை என்பதால் படம் தேங்குகிறது.
சூர்யா சம்பந்தப்பட்ட ரெஃபரென்ஸ், லியோ ரெஃபரென்ஸ், சமகால ரெஃபரென்ஸ் என படத்தில் சேர்த்துள்ள ரெஃபரென்ஸ் எல்லாம் சுவாரஸ்யம் சேர்க்கிறது. ஆனால் மைய கதையில் அவை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் வெறுமனே கைதட்டல்களை மட்டும் குறிவைத்ததாய் இருக்கிறது.
இந்த குறைகளை எல்லாம் தாண்டி ஒட்டு மொத்தமாக பார்க்கையில் ஒரு மாஸ் கமர்ஷியல் படமாக கொண்டாட்டமான அனுபவத்தை கொடுக்க தவறவில்லை கருப்பு.

