காதலைப் பகடையாக வைக்கும் காதலர்கள்! | Nee Forever Review | Archenaa Ravi
காதலை பகடையாக வைக்கும் காதலர்கள்!(1.5 / 5)
அஜய் (சுதர்ஷன் கோவிந்த்) காதலர்களுக்கான ஒரு `நீ ஃபாரெவர்' என்ற செயலியை டெவலப் செய்து வருகிறார். ஸ்டார்ட் அப் மூலம் அதனை உருவாக்க, ஸ்பான்சர் தேடுகிறார். மகி (அர்ச்சனா ரவி) கையில் தயாரிப்பாளர் இருந்தாலும் அவர் கேட்கும் காதல் கதை இல்லாமல் அல்லாடுகிறார். காதல் அனுபவமே இல்லாத ஒருவர், எப்படி காதலுக்கான ஆப் / காதல் படம் எடுக்க முடியும் என்ற கேள்வியை அஜய் மற்றும் மகி எதிர்கொள்கிறார்கள். இதற்காகவே யாரையாவது அர்ஜென்ட்டாக காதலிக்க ஆள் தேடுகிறார்கள் இருவரும். கடைசியில் இந்த இருவருமே ஒருவரை ஒருவர் தங்கள் சுயநலத்துக்காகக் காதலிக்கத் துவங்குகிறார்கள். இந்தக் காதல் ஒருகட்டத்தில் சீரியஸ் ஆக, அதன்பின் என்ன நடக்கிறது என்பதே இப்படத்தின் மீதிக்கதை.
காதலும் காதல் சார்ந்த உறவுகளையும் பற்றிப் பேச முயன்றிருக்கிறார் அஷோக்குமார் கலைவாணி. அதை முடிந்தவரை ஒரு காமெடி படமாகவும் கொடுக்க உழைத்திருக்கிறார்.
அஜய் என்ற கூச்ச சுபாவ இளைஞர் பாத்திரத்தில் சுதர்ஷன் பொருந்திப் போகிறார். ஆனால் நடிப்பு அவ்வளவு அழுத்தமாக இல்லை. உணர்வுப்பூர்வமான காட்சிகளோ, ஜாலியான காட்சிகளோ எல்லாவற்றிலும் நடிக்க சிரமப்படுகிறார். நாயகி அர்ச்சனா ரவி, துறுதுறு பெண்ணாக கவர்ந்தாலும், அவர் நடிப்பில் அப்பட்டமான செயற்கைத்தனம். இவர்கள் ஒருபக்கம் என்றால் மிகப் போலித்தமான பொள்ளாச்சி பாஷை பேசி, கொடூரமான நடிப்பால் பெரிய டிஸ்டர்பன்ஸ் செய்கிறார் ஒய் ஜி மகேந்திரன். ஹீரோவின் நண்பர்கள், ஹீரோயின் அறைத்தோழி, ஹீரோ அம்மா, அக்கா, மாமா என எல்லா பாத்திரங்களும் மிக செயற்கையாகவே இருக்கிறார்கள்.
அஷ்வின் ஹேமந்த் இசையில் பாடல்கள் பெரிய அளவில் கவரவில்லை. ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாச்சார்யா மட்டும் படத்தை விஷுவலாக சுவாரஸ்யமாக கொடுக்க போராடி இருக்கிறார். படம் 2.15 மணிநேரம்தான் என்றாலும், சுவாரஸ்யமற்ற காட்சிகளின் கோர்வையாக படம் இருப்பதால் பெரும் அயர்ச்சி ஏற்படுகிறது.
கதையளவில் நல்ல சுவாரஸ்யமான ஒன்லைன் எடுத்துக் கொண்டு, அதனை அப்படியே கொடுக்க நல்ல நடிகர்களோ, சுவாரஸ்யமான காட்சியோ இல்லாமல் படம் தடுமாறுகிறது. க்யூட் என நினைத்து வைக்கப்பட்டுள்ள காட்சிகளும் அவ்வளவு ரசனைக்குரியதாக இல்லை. ஒய் ஜி மகேந்திரன் பாத்திரம் காதல் வேண்டாம் என சொல்வதற்கான காரணம் மிக மேம்போக்காக வைக்கப்படுகிறது. அவன் மனம் திரும்பும் காட்சி அதைவிட மேம்போக்காக கையாளப்பட்டுள்ளது.
எனவே அது எந்த தாக்கத்தையும் நமக்கு தரவில்லை. ஹீரோ ஹீரோயினால் இன்னொரு ஒரு ஜோடி இணைகிறது என்ற சைடு ட்ராக்கும், ஹீரோவின் அம்மா - அப்பா ஏன் பிரிந்தார்கள் என்பதற்குச் சொல்லும் காரணமும் சுத்தமாகச் செட்டாகவில்லை.
கதை அளவில் இருந்த சுவாரஸ்யத்தை நடிகர்களும், காட்சிகளும் கடத்தி இருந்தால் ரசித்திருக்கலாம்.

