“என் தந்தையை போன்றவர் அவர்” - ஏ.ஆர்.ரஹ்மான் உடனான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மோகினி டே!
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது தந்தையை போன்றவர் என அவருடன் பணியாற்றிய மோகினி டே தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள அவர், ரஹ்மான் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளதாகவும், பிறரது தனிப்பட்ட விஷயங்களுக்கு மதிப்பளியுங்கள் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுதொடர்பான தன் வீடியோ பதிவில் மோகினி டே, “எனக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கும் எதிராக, தவறான மற்றும் ஆதாரமற்ற அனுமானங்கள், கூற்றுக்கள் பரப்பப்படுவதை பார்த்தேன். இரு தனிவேறு சம்பவங்களை தொடர்புபடுத்தி கொச்சைப்படுத்தியிருப்பது வேதனை தருகிறது. உண்மையில் இவையாவும் குற்றச்செயல்கள்.
இதுபோன்ற உணர்ச்சிகரமான விஷயங்களில் (விவாகரத்து) எந்த மரியாதையும், அனுதாபமும் இல்லாமல் மக்கள் இருப்பது வருத்தமளிக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு ஜாம்பவான், அவர் எனக்கு அப்பா போன்றவர். சொல்லப்போனால் என் தந்தையை விட வயதில் மூத்தவர். ரஹ்மானின் மகள் வயது எனக்கு. என் வாழ்க்கையிலும், வளர்ப்பிலும் முக்கியப் பங்கு வகித்த பல முன்மாதிரிகள் எனக்கு உண்டு. அந்த முன்மாதிரிகளில், ரஹ்மான் அவர்களும் ஒருவர்.
என் சிறுவயது முதல் கிட்டத்தட்ட 8.5 வருடங்கள் ஏ.ஆர்.ரஹ்மான் உடன் அவரது திரைப்படங்கள், சுற்றுப்பயணங்கள் போன்றவற்றிற்காக அவருடன் பணிபுரிந்த தருணங்களை நான் மதிக்கிறேன். அவருடன் பணி செய்ததை, பொக்கிஷமாக இன்றும் என்றும் கருதுவேன்!
நான் யாருக்கும் எந்த விளக்கமும் கொடுக்க வேண்டியதில்லை என்றே நினைக்கிறேன். அதேநேரம் எந்தவொரு விஷயமும் என் தனிப்பட்ட வாழ்வை தொந்தரவு செய்வதையும் நான் விருப்பவில்லை. அதனாலேயே இதை சொல்கிறென். பிறரின் தனியுரிமையை மதித்து நடங்கள்” என்றுள்ளார்.
முன்னதாக ஏ.ஆர். ரஹ்மானை பிரிவதாக அவரது மனைவி அண்மையில் அறிவித்த நிலையில், ரஹ்மானுடன் பணியாற்றி வந்த மோகினி டே, தனது கணவர் மார்க் ஹர்ட்சுவை பிரிவதாக அதேநாளில் அறிவித்தார். இந்நிலையில், இவர்கள் இருவர் குறித்தும் சில தகவல்கள் வதந்திகளாக பரவியது.