பாஜக சார்பில் போட்டியா- என்ன சொல்கிறார் மோகன்லால்?

பாஜக சார்பில் போட்டியா- என்ன சொல்கிறார் மோகன்லால்?

பாஜக சார்பில் போட்டியா- என்ன சொல்கிறார் மோகன்லால்?
Published on

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று நடிகர் மோகன்லால் கூறினார்.


மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால். தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ள இவர், பாஜகவில் சேர இருப்பதாக கடந்த ஒரு வருடமாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் இதுபற்றி அவர் எதுவும் சொல்லவில்லை. இந்நிலையில், வரும் பாராளுமன்ற தேர்தலில் அவரை திருவனந்தபுரம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட வைக்க, ஆர்எஸ்எஸ் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும் இதுபற்றி மாநில பாஜகவுக்கு எதுவும் தெரியாது என்றும் அந்த அமைப்பின் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பிரதமர் மோடியை மோகன்லால் சமீபத்தில் சந்தித்தார். கேரளாவின் வயநாட்டில் சர்வதேச மலையாளி வட்டமேஜை அமைப்பின் விழாவுக்கு அழைப்பு விடுப்பதற்காகவே இந்த சந்திப்பு என்றாலும் அவர் பாஜகவில் சேர்வதற்கான அறிகுறி இது என்றும் கேரளாவில் பேசப்பட்டது. இதுபற்றி செய்திகளும் வெளியாயின.

இதுபற்றி மோகன்லாலிடம் கேட்டபோது, ’எனது அறக்கட்டளை நடத்தும் விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கவே, பிரதமர் மோடியை சந்தித்தேன். மற்றபடி திருவனந்தபுரம் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பாக நான் போட்டியிடுவது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இதுபற்றி கருத்து சொல்லவும் விரும்பவில்லை. எனது பணியை செய்ய விடுங்கள்’ என்றார்.

திருவனந்தபுரம் தொகுதி எம்.பி. சசிதரூரிடம், மோகன்லால் போட்டியிடுவது பற்றி கேட்டபோது, ’எனது தொகுதியில் அவருக்கு வீடு இருக்கிறது. ஒரு நடிகராக நான் அவரை மதிக்கிறேன். தங்கள் துறையை விட்டு மற்ற துறைக்கு யார் வந்தாலும் வெவ்வேறு பிரச்னைகளை சந்திக்க நேரிடும்’ என்று கூறியுள்ளார்.

கேரள எதிர்க்கட்சித்தலைவர் ரமேஷ் சென்னிதாலா கூறும்போது ’மோகன்லால் சிறந்த நடிகர். அவரை மக்கள் ரசிக்கிறார்கள். அவர் அரசியலுக்கு வரும் தவறைச் செய்வார் என்று நினைக்கவில்லை’ என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com