இளையராஜா பாடல்களை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடுவதால் பிரச்னை ஏற்படுவது ஆச்சர்யமளிப்பதாக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தைக் கொண்டாடும் வகையில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அவர் தொடர் கச்சேரியினை நடத்தி வருகிறார். இதில், இசையமப்பாளர் இளையராஜா இசையமைத்த பாடல்களை பாட முன் அனுமதி பெற வேண்டும் என்று எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு அவர் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்துள்ள எஸ்பிபி, தனக்கு காப்புரிமை சட்டவிவகாரம் தெரியாது எனவும், ஆனால் இனி இளையராஜா இசையமைப்பில் தான் பாடிய பாடல்களைப் பாடப் போவதில்லை எனவும் கூறியுள்ளார்.
இந்தப் பிரச்னை குறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு ஆச்சரியம் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், இளையராஜா பாடல்களை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடுவதில் பிரச்னை ஏற்படுவது தனக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது எனவும், இந்த விவகாரத்தில் சுமூக தீர்வு ஏற்படும் என்று தாம் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.