விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தின் மூன்றாவது போஸ்டர் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் நடித்து வரும் ‘மாஸ்டர்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றது. இந்தப் படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியும், ஹீரோயினாக மாளவிகா மோகனும் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக ஆண்ட்ரியா, கைதி படத்தின் வில்லன் காளிதாஸ், சாந்தனு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
கத்தி படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக விஜயின் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்து வருகிறார் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையிலும், கர்நாடக மாநிலம் ஹிமோகாவிலும் நடைபெற்று வந்தன. ‘மாஸ்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி வெளியானது.
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அலை அலையான வடிவில் உள்ளது. விஜய் மேஜை ஒன்றின் மீது அமர்ந்து கொண்டு, கைக்காப்பு ஒன்றினை சுழற்றிவிடுவது போல் அது அமைந்திருந்தது. ஒரு கையால் தன்னுடைய தலைமுடியை கோதிக் கொண்டிருந்தார். லோகேஷ் கனகராஜ் படம் என்பதால், மாநகரம், கைதி படங்களைப் போன்று மாஸ்டரும் ஒரு முக்கியமான கதையை கொண்டிருக்கும் என்றும் அதற்கேற்ப விஜயின் லுக் இருக்கிறது என்றும் கூறப்பட்டது. போஸ்டரை பொருத்தவரை விஜய் ஒரு விசாரணைக் கைதியாக இருக்க வாய்ப்புள்ளதாக தோன்றுகிறது என்ற பேச்சும் அடிபட்டது.
இதனையடுத்து இப்படத்தின் செகண்ட் லுக் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 15-ஆம் தேதி வெளியானது. இந்நிலையில் மூன்றாவது போஸ்டர் இன்று வெளியாகி உள்ளது. அதில் விஜய் சேதுபதியும் விஜயும் மோதிக் கொள்ளும் விதமாக இருவரும் வாயை பிளந்தபடி ஆக்ரோஷமாக சண்டையிடும்படி உள்ளனர். மேலும் விஜய்சேதுபதி மாலை அணிந்தபடி உள்ளார். இப்படத்தில் விஜய்சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என முன்பே கூறிவந்த நிலையில் இந்த போஸ்டர் அதை உறுதி செய்துள்ளது.