இயக்குநர் ஸ்ரீகுமாருக்கு எதிராக நடிகை மஞ்சு வாரியார், கேரள காவல்துறைத் தலைமை அதிகாரி லோக்நாத் பெஹேராவிடம் புகார் அளித்துள்ளார்.
கேரள திரைப்பட உலகில் மிக பிரபலமான நடிகை மஞ்சு வாரியார். இவர் திலீப்புடன் விவாகரத்து பெற்ற பிறகு தனித்து வாழ்ந்து வருகிறார். இவர் கடந்த வருடம் மோகன்லால் உடன் சேர்ந்து நடித்த ‘ஒடியன்’ திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்தப் படம் மலையாள பாக்ஸ் ஆபீஸில் பெரிய வருமானத்தை ஈட்டியதால் மீண்டும் திரை உலகில் விட்ட இடத்தை மஞ்சு வாரியார் கைப்பற்றினார். இந்தப் படத்தை ஸ்ரீகுமார் மேனன்தான் இயக்கி இருந்தார்.
இந்நிலையில் விளம்பர மற்றும் திரைப்பட இயக்குநர் ஸ்ரீகுமார் மேனனுக்கு எதிராக மஞ்சுவாரியார், கேரள காவல்துறை தலைமை அதிகாரி லோக்நாத் பெஹேராவிடம் தொலைபேசியில் புகார் ஒன்றை கூறியுள்ளார். அவரின் அறிவுறுத்தலின் பேரில், அவரை சந்திக்க வந்த டிஜிபியிடம் புகார் மனுவையும் அளித்துள்ளார்.
அதில் இயக்குநர் ஸ்ரீகுமார் தன்னையும் தனது நண்பர்களையும் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் அவமானப்படுத்தும் விதமாகவும் மிரட்டும் விதமாகவும் செயல்பட்டு வருவதாக கூறியுள்ளார். இதனால் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டு உள்ளதாகவும், இதை கூட்டாக சேர்ந்து சிலர் செய்து வருவதாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது.
மேலும் அவர், சமூக வலைத்தளங்களில் தனக்கு எதிராக எழுதப்பட்ட தகவல்கள், மீம்ஸ்கள், தனது பெயரில் போலியாக அச்சடிக்கப்பட்ட லெட்டர் பேட், போலி காசோலை என அனைத்தையும் திரட்டி ஆதாரமாக வழங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து மஞ்சு வாரியார், “சமூக வலைத்தளங்களில் பரவும் போலி பரப்புரைகளால் பாதிப்பிற்குள்ளானவள் நான். ‘ஒடியன்’ பட வெளியீட்டுக்குப் பிறகு என் மீது இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. ஸ்ரீகுமார் மேனன் எனக்கு பல தொந்தரவுகளை ஏற்படுத்தி வருகிறார். ஆகவே அவர் எனக்கு பல தீங்குகளை கொடுப்பார் என அஞ்சுகிறேன்” என்று கூறியுள்ளார்.