நடிகை மஞ்சு வாரியார் கொடுத்த புகார்: இயக்குநர் சணல்குமார் சசிதரன் கைது

நடிகை மஞ்சு வாரியார் கொடுத்த புகார்: இயக்குநர் சணல்குமார் சசிதரன் கைது
நடிகை மஞ்சு வாரியார் கொடுத்த புகார்: இயக்குநர் சணல்குமார் சசிதரன் கைது

"தன்னை சமூக வலைத்தளங்கள் மூலம் அவமானப்படுத்துவதாகவும், தேவையின்றி தன்னைப் பின் தொடர்வதாகவும்" பிரபல நடிகை மஞ்சுவாரியார் கொடுத்த புகாரின்படி மலையாளத் திரைப்பட இயக்குநர் சணல்குமார் சசிதரன் கைதுசெய்யப்பட்டார். அவரிடம், தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மஞ்சு வாரியார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல மலையாள திரைப்பட இயக்குநர், சணல்குமார் சசிதரன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார்.

அதில், “மஞ்சு வாரியாரை காணவில்லை. அவர், கந்துவட்டி கும்பல் மற்றும் மஞ்சு வாரியாரின் மேலாளர்களாக இருக்கும் பினீஷ் சந்திரன் மற்றும் பினு நாயர் ஆகியோரின் பிடியில் இருக்கிறார். அவர், உயிருக்கு ஆபத்து உள்ளது. இந்தப் பதிவை சாதாரணமாக எடுத்துக் கொள்ளவேண்டாம். ஊடகங்களும் பத்திரிககைகளும் இந்தத் தகவலை பெரிதாக்கி மஞ்சுவாரியாரைக் காப்பாற்ற வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இயக்குநர் சணல்குமார் சசிதரனின் இந்த ஃபேஸ்புக் பதிவு, கேரளாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனாலும், இந்தப் பதிவிற்கு மஞ்சுவாரியார் தரப்பிலிருந்தோ மஞ்சு வாரியாரின் நண்பர்கள் மற்றும் உறவினர் மூலமோ எந்த பதிலும் இல்லாமல் இருந்தது. இது மஞ்சு வாரியாரின் ரசிகர்களுக்கு சந்தேகத்தை வலுப்படுத்துவதாக அமைந்தது.

இந்நிலையில் நடிகை மஞ்சுவாரியார் கொச்சி நகரக் காவல் ஆணையர் டி எச் நாகராஜிடம் நேரடியாகச் சென்று புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், "மலையாள திரைப்பட இயக்குநர் சணல்குமார் சசிதரன் சமூக வலைதளங்கள் மூலம் தன்னை அவமானப்படுத்துவதாகவம் தன்னை தேவையின்றி பின் தொடர்வதாகவும்" குறிப்பிட்டுள்ளார்.இதையடுத்து இயக்குநர் சனல் குமார் சசிதரன் மீது எர்ணாகுளம் எளமகரை போலீசார், தகவல் தொழில்நுட்ப சட்டப்படி சமூக வலைத்தளங்கள் மூலம் மிரட்டல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து கொச்சி நகர காவல் ஆணையாளர் உத்தரவுபடி எர்ணாகுளம் போலீசார் பாறசாலை வந்து, பாறசாலை போலீசார் உதவியுடன் நெய்யாற்றங்கரையிலுள்ள வீட்டில் இருந்து மலையாளத் திரைப்பட இயக்குநர் சணல்குமார் சசிதரனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சணல் குமாரை எர்ணாகுளம் எளமகரை காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

முன்னதாக, கைது செய்யப்பட்டு போலீசார் அழைத்துச் செல்லும்போது, தனது உயிருக்கு போலீசாரால் ஆபத்து எனவும் மஞ்சுவாரியார் கொடுத்த புகார் கூட ஏதோ மிரட்டலின் அடிப்படையில்தான் எனவும் இயக்குனர் சணல்குமார் சசிதரன் குற்றச்சாட்டை முன்வைத்து தனது கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். அதை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நேரலையாகவும் ஒளிபரப்பு செய்தார்.

நடிகை மஞ்சுவாரியாருக்கும் இயக்குனர் சணல் குமாருக்கும் என்ன தொடர்பு? மஞ்சு வாரியாரை காணவில்லை அவர் உயிருக்கு ஆபத்து என்று சனல் குமார் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் ஏன் பதிவிட வேண்டும்? ஃபேஸ்புக்கில் இந்த பதிவிட்டு நான்கு நாட்களுக்கு மேல் ஆகியும் மஞ்சுவாரியரிடமிருந்து ஏன் எந்த பதிலும் இல்லாமல் இருந்தது என்ற கோணங்களில் எளமகரை போலீசார் இயக்குனர் சனல் குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com