கேரள திரையுலகில் மீண்டும் அதிர்ச்சி - பிரபல நடிகர் மீது இளம்பெண் பாலியல் வன்கொடுமை புகார்

கேரள திரையுலகில் மீண்டும் அதிர்ச்சி - பிரபல நடிகர் மீது இளம்பெண் பாலியல் வன்கொடுமை புகார்
கேரள திரையுலகில் மீண்டும் அதிர்ச்சி - பிரபல நடிகர் மீது இளம்பெண் பாலியல் வன்கொடுமை புகார்

சினிமா வாய்ப்பு தருவதாகக் கூறி, பாலியல் வன்கொடுமை செய்ததாக, இளம்பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில், பிரபல மலையாள நடிகர் விஜய்பாபு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலையாள திரையுலகில் ஏராளமான படங்களில் நடித்து நடிகராகவும், தயாரிப்பாளராகவும் பிரபலமானவர் விஜய்பாபு. இவர், ‘பிலிப்ஸ் அண்ட் தி மங்கி பெண்’ (Philips and the Monkey Pen) என்ற குழந்தைகள் படத்தை தயாரித்து நடித்தற்காக, கேரள மாநில விருதை பெற்றுள்ளார். மேலும், விஜய்பாபு பிரைடே பிலிம் ஹவுஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் பிரபலமான படங்களை தயாரித்துள்ளார்.

இந்நிலையில் விஜய்பாபு மீது, இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் 13-ம் தேதி முதல், ஏப்ரல் 14-ம் தேதி வரை தன்னை உடல்ரீதியாக தாக்கியதுடன், பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக, நடிகர் விஜய் பாபு மீது பாதிக்கப்பட்ட பெண், ஏப்ரல் 22-ம் தேதி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளார். மேலும் அந்தப் பெண், பாலியல் வன்முறைக்கு எதிரானப் பெண்கள் என்ற பெயரில் உள்ள ஃபேஸ்புக் குழுவில், புகார் குறித்து முழுமையாக தெரிவித்துள்ளார்.

அதில், எர்ணாகுளத்தில் உள்ள விஜய்பாபுவின் அடுக்குமாடி குடியிருப்பில், தனக்கு சினிமா துறையில் நல்ல வாய்ப்புகளை வாங்கித் தருவதாக கூறி, அவர் தன்னை பாலியல் ரீதியாக, பலமுறை சித்திரவதை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். மலையாள திரைத்துறையில் சில வருடங்களாகத் விஜய்பாபுவை தெரியும் என்றும், அவருடன் ஒரு திரைப்படத்தில் பணியாற்றியதாகவும் அந்தப் பெண், அந்த ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளார்.

திரைப்படத்துறையில் புதுமுகமாக இருந்ததால், சரியான வழிகாட்டுதல் இல்லாமல், தான் பணியாற்றிய காலத்தில் நட்பாகப் பழகியதன் மூலமும், தனக்கு அறிவுரை வழங்கியதன் மூலமும், தனது நம்பிக்கையைப் பெற்று, பின்னர் விஜய்பாபு இவ்வாறு நடந்துகொண்டதாக அந்தப் பெண் பதிவில் குற்றஞ்சாட்டியுள்ளார். தனது தனிப்பட்ட மற்றும் தொழில் சார்ந்த பிரச்னைகளுக்கு ஆலோசனைகள் சொல்வதுபோல், தன்னிடம் அத்துமீறி நடந்துகொண்டதாக அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.

“ஒருநாள் எனது வயிற்றில் கடுமையாக தாக்கி, எனக்கு என்ன நடக்கிறது என்று உணர முடியாதநிலையில் விஜய் பாபு, என்னை துன்புறுத்தினார். இப்போது தான் உணர்கிறேன். நான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளேன்” என்று அந்தப் பெண் பதிவில் புகார் தெரிவித்துள்ளார். மேலும் வீடியோ ஒன்றை பதிவுசெய்துகொண்டு தன்னை மிரட்டுவதாக தெரிவித்த அந்தப் பெண், தனது பாதுகாப்பிற்காக இதுவரை பயந்ததாகவும், இனி வாயை மூடிக் கொண்டிருக்கப்போவதில்லை என்றும், அந்தப் பெண் கூறியுள்ளார்.

தனக்கு நீதி கிடைக்கும் என உறுதியாக நம்புவதாக தெரிவித்த அந்தப் பெண், இதுபோன்று வேறு எந்தப் பெண்ணும் தங்கள் வாழ்க்கையில் இந்த கொடுமையையும், அதிர்ச்சியையும் சந்திக்கக்கூடாது என்றும் பதிவிட்டுள்ளார். இதையடுத்து, கடந்த ஏப்ரல் 26-ம் தேதி இரவு, விஜய்பாபு ஃபேஸ்புக் நேரலையில் வந்து, இளம் பெண்தான், தன்னை சித்திரவதை செய்வதாகவும், 'உண்மையான பலிகடா' என்றால் அதுதான் என்றும், குற்றம் சாட்டினார். மேலும் பாதிக்கப்பட்டப் பெண்ணின் பெயரையும் நேரலையில் வெளிப்படுத்தினார்.

"நான் எந்தத் தவறும் செய்யவில்லை, நான் பாதிக்கப்பட்டவன், இந்த நாட்டின் சட்டம் அந்தப் பெண்ணை பாதுகாக்கிறது. இந்தப் பொய்யான புகாரால் நான் கஷ்டப்படுகையில் அவள் நிம்மதியாக இருக்கிறாள். அந்தப் பெண் மீது அவதூறு வழக்கு தொடுப்பேன். அந்தப் பெண்ணை அவ்வளவு எளிதில் தப்பிக்க விடமாட்டேன். என்னிடம் உள்ள அனைத்து ஆதாரங்களையும் என்னால் பகிர்ந்து கொள்ள முடியும். ஆனால் அந்தப் பெண்ணுடைய குடும்பம் பாதிக்கக்கூடாது என்பதற்காக, அந்த ஆதாரங்களை பகிர்ந்துகொள்ள விரும்பவில்லை.

நான் பதில் சொல்ல வேண்டியது, எனது மனைவி, அம்மா, சகோதரி மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே. மேலும், 'விஜய் பாபு குற்றவாளி இல்லை' என்று ஒரு சிறிய குறிப்புடன் இதை முடிக்க விரும்பவில்லை. அந்தப் பெண் ஒரு ஆடிஷனுக்கு வந்தார். பின்னர் தேவையான கதாபாத்திரத்திற்கு தேர்வானநிலையில், காஸ்டிங் கவுச் பற்றிய பேச்சுகள் மட்டுமே நடந்தது. அதன்பிறகு, கடந்த 2020 டிசம்பர் மாதம் முதல், மார்ச் மாதம் 2021 வரை, மன உளைச்சலில் இருப்பதாக முதலில் மெசேஜ் அனுப்ப ஆரம்பித்தார்.

அந்தப் பெண் அனுப்பிய மெசேஜ்கள் மற்றும் 400-க்கும் மேற்பட்ட ஸ்கிரீன் ஷாட்களும் என்னிடம் உள்ளன. பாலியல் வன்கொடுமை அல்லது ஒருமித்த குற்றச்சாட்டுகள் எதுவாக இருந்தாலும், எல்லாவற்றையும் நான் பதிவு செய்து வைத்துள்ளேன்" என்று விஜய்பாபு ஃபேஸ்புக் லைவில் கூறினார். இதற்கிடையில், இளம் பெண் அளித்த புகாரின் பேரில், நடிகர் விஜய் பாபு மீது, எர்ணாகுளம் தெற்கு போலீசார் ஏப்ரல் 22-ம் தேதி வழக்குப் பதிவு செய்துள்ளநிலையில், இதுகுறித்த விசாரணை இன்னும் துவங்கவில்லை.

மேலும், வழக்கமாக பாலியல் புகார்களில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயரைப் பொதுவெளியில் சொல்லக்கூடாது என்ற விதி உள்ளநிலையில், விஜய்பாபு சம்பந்தப்பட்ட பெண்ணின் பெயரை ஃபேஸ்புக் லைவில் கூறியதால், அதற்கென தனி வழக்கு பதிவு செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, ஓடும் காரில் பிரபல மலையாள நடிகை கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான வழக்கில், நடிகர் திலீப் மீது குற்றஞ்சாட்டப்பட்டு 4 வருடங்களுக்கும் மேலாக வழக்கு நடைபெற்று வரும்நிலையில், இளம்பெண்ணின் இந்தப் புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com