"என் டூப்தான் படத்தில் நடித்தாரா?" - மாளவிகா மோகனன் விளக்கம் | Malavika Mohanan | The Raja Saab
பிரபாஸ், மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரிதி நடித்து மாருதி இயக்கி பொங்கல் வெளியீடாக வந்த படம் `தி ராஜா சாப்'. இப்படம் விமர்சனரீதியாக மிகவும் பின்னடைவைச் சந்தித்தது. திரையரங்கில் இப்படம் பெரிய சறுக்கலைப் பார்த்தபின் சமீபத்தில் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியானது. அதன்பிறகு மீண்டும் இப்படம் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானது. மேலும் இப்படத்தின் பல காட்சிகளில் ஹீரோ பிரபாஸுக்கு பதில் டூப்பை நடிக்கவைத்து சிஜியில் முகத்தை மாற்றியதாக சர்ச்சைகள் எழுந்து இணையத்தில் அது பேசுபொருளானது. இப்போது மேலும் அப்படத்தில் சண்டைக் காட்சியில் நடித்த மாளவிகா மோகனனும் டூப் வைத்து சண்டை செய்துவிட்டு, அவரே செய்ததாக சொல்கிறார் என்ற விஷயமும் அதிகமாக பரவியது.
இதனைப் பார்த்த நடிகை மாளவிகா மோகனன் அதற்கு பதிலளிக்கும் விதமாக பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அப்பதிவில் " ‘தி ராஜாசாப்’ படத்திற்காக நான் சொந்தமாக ஸ்டண்ட் செய்யவில்லை எனவும், ஒரு பாடி டபுள் அதைச் செய்தார் என அந்தப் படத்தில் எனக்கு இரட்டையராக இருந்த ஒரு ஸ்டண்ட் கலைஞரின் புகைப்படம் ஆன்லைனில் பரவி வருவதையும் நான் நிறைய பதிவுகளில் பார்த்தேன். முதலாவதாக, நான் ஆக்ஷன் செய்வதை மிகவும் ரசிக்கிறேன், சிறு வயதிலிருந்தே உடல் ரீதியான சவால்களைச் செய்வதிலும், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதிலும் எனக்கு ஆர்வம் அதிகம்.
இரண்டாவதாக, படப்பிடிப்பு தளத்தில் நடிகர்கள் தங்கள் சொந்த ஸ்டண்ட்களை செய்தாலும்கூட, stunt double செட்களில் இருப்பார்கள். எனவே தொழில்முறை சண்டைப் பயிற்சியாளர்களான அவர்கள், நடிகர்கள் அந்தச் சண்டையை நடிப்பதற்கு முன் ஒத்திகையை தர உதவுவார்கள் அல்லது சில காட்சிகளில், நடிகர் நேரடியாக செய்வது மிகவும் ஆபத்தானது என்று அவர்கள் நினைக்கும்போது, சரியாகச் செய்வது எப்படி என தெரியாத நபரைவிட ஒரு தொழில்முறை நிபுணர் அதைச் செய்வது நல்லது என இயங்குவார்கள்.
எனவே, இங்கு நான் நடித்த சில சண்டைகாட்சிகளின் btsஐ பகிர்கிறேன். அவற்றை எப்படிச் சரியாகச் செய்வது என்று எனக்குக் கற்றுக் கொடுத்த என் stunt doubleக்கு என் அணைப்புகள்" எனக் குறிப்பிட்டுள்ளார் மாளவிகா.

