மலையாளத்தில் பிரேமம் படத்தில் நடித்த சாய்பல்லவி தற்போதும் மலர் டீச்சராக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். தெலுங்கில் அவர் பானுமதி கேரக்டரில் அறிமுகமான ஃபிடா திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மலையாளத்தில் மலர்ச் டீச்சரைப்போலவே தெலுங்கில் பானுமதியாக ரசிகர்கள் அவரைத் தரிசிக்கத் தொடங்கி விட்டனர். இந்நிலையில் தெலுங்கில் அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தற்போது நானியுடன் எம்சிஏ படத்தில் நடித்து வருகிறார்.
படவாய்ப்பைத் தொடர்ந்து ஷாப்பிங் மால், நகைக்கடை திறப்பு விழாக்காக பெரும் தொகை கொடுக்கத் தயாராகி அவரை பலரும் அணுகி வருகின்றனர். ஆனால், அவற்றை எல்லாம் தவிர்த்து விடுகிறார் சாய்பல்லவி. இதுகுறித்து அவர், ’கடை திறப்பு விழாக்களில் கலந்துகொள்ள எனக்கு விருப்பம் இல்லை. அதற்காக என்னை யாரும் அணுக வேண்டாம். மருத்துவமனை, தொண்டு நிறுவனங்களின் திறப்பு விழாக்கள் என்றால் எதிர்ப்பார்புகள் இல்லாமல் இலவசமாகவே கலந்து கொள்ள தயாராக இருக்கிறேன். மருத்துவராவதே எனது லட்சியமாக இருந்தது. ஆகையால் மருத்துவராக நடிக்க ஆவலாக இருக்கிறேன்’ என்கிறார்.