சிம்பு - ஹன்சிகா நடித்துள்ள மஹா திரைப்படத்தை வெளியிட தடையில்லை : சென்னை உயர் நீதிமன்றம்

சிம்பு - ஹன்சிகா நடித்துள்ள மஹா திரைப்படத்தை வெளியிட தடையில்லை : சென்னை உயர் நீதிமன்றம்
சிம்பு - ஹன்சிகா  நடித்துள்ள மஹா திரைப்படத்தை வெளியிட தடையில்லை : சென்னை உயர் நீதிமன்றம்

சிம்பு - ஹன்சிகா நடித்துள்ள மஹா படத்தை வெளியிட தடை விதிக்க கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

நடிகர் சிம்பு, நடிகை ஹன்சிகா நடிப்பில் மஹா என்ற படம் உருவாகியுள்ளது. இப்படத்தை எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் மதியழகன் தயாரிக்கிறார். இப்படத்தை உபைத் ரஹ்மான் ஜமீல் இயக்கினார். இந்நிலையில், தனது கதையை வைத்து, தனக்கு தெரியாமல் படத்தை முடித்து, ஓ.டி.டி. தளத்தில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முயற்சிப்பதாக கூறி, படத்தை வெளியிட தடை கோரி இயக்குனர் ஜமீல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தனது மனுவில், இந்த கதைக்கு தேவையான காட்சிகளை எடுக்காமல் தனது உதவி இயக்குனர் அஞ்சு விஜய் என்பவரை வைத்து படமாக்கியுள்ளதாகவும், தனக்கு தெரியாமல் படத்தை எடிட்டர் ஜான் ஆப்ரஹாம் மூலம் எடிட் செய்து, பின்னணிகுரல் பதிவுசெய்து படத்தை வெளியிட முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

படத்தை இயக்க 24 லட்சம் ரூபாய் ஊதியம் தருவதாக ஒப்புக்கொண்ட தயாரிப்பு நிறுவனம், 8 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மட்டுமே தந்துள்ளதால், மீதமுள்ள 15 லட்சத்து 85 ஆயிரம் ரூபாயை வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார். மேலும், தனக்கு தெரியாமல், எடுக்க வேண்டிய காட்சிகளை எடுக்காமல் படத்தை முடித்ததற்காக தனக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரம் தொடர்பாக இயக்குனர்கள் சங்கத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் இயக்குனருக்கு வழங்க வேண்டிய சம்பள பாக்கியில் 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை வழங்க தயாரிப்பு தரப்பில் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. அதேபோல, இயக்குனரும் அதை ஏற்றுக் கொண்டதாகவும், 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை இயக்குனருக்கு வழங்கி விட்டதாகவும் தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இயக்குனர் சங்கத்தில் நடந்த பேச்சுவார்த்தை முடிவின் அடிப்படையில் படத்தை ஓ.டி.டி., தளத்தில் வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை தயாரிப்பாளர் தரப்பில் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அதேசமயம், பிரதான வழக்கில் எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்ய இரு தரப்பினருக்கும் உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜூன் 28 ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com