‘புலி’ பட சம்பள விவகாரம் - விஜய்க்கு விதித்த அபராதத்துக்கான இடைக்கால தடை நீட்டிப்பு

‘புலி’ பட சம்பள விவகாரம் - விஜய்க்கு விதித்த அபராதத்துக்கான இடைக்கால தடை நீட்டிப்பு
‘புலி’ பட சம்பள விவகாரம் - விஜய்க்கு விதித்த அபராதத்துக்கான இடைக்கால தடை நீட்டிப்பு

‘புலி’ படத்திற்குப் பெற்ற 15 கோடி ரூபாய் சம்பளத்தை மறைத்ததாகக் கூறி, நடிகர் விஜய்-க்கு 1.50 கோடி ரூபாய் அபராதம் விதித்த வருமான வரித்துறை உத்தரவுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016-17 ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை நடிகை விஜய் தாக்கல் செய்த போது, அந்த ஆண்டிற்கான வருமானமாக 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார்.

அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித்துறை, நடிகர் விஜய் வீட்டில் கடந்த 2015-ம் ஆண்டு நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்த்தது. அதன்படி, ‘புலி’ படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என கண்டறிந்தது.

வருமானத்தை மறைத்ததற்கான ஒன்றரை கோடி ரூபாய் அபராதம் விதித்து கடந்த ஜூன் 30 ஆம் தேதி வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது. தனக்கு அபராதம் விதிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அபராதம் விதிப்பதாக இருந்திருந்தால், 2019 ஆம் ஆண்டிலேயே உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும் என்றும், காலதாமதமாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, வருமான வரித்துறை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தும், மனுவுக்கு வருமான வரித்துறை பதிலளிக்கவும் உத்தரவிட்டார்.

இந்த வழக்கு மீண்டும் நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஏற்கனவே பிறப்பித்த இடைக்கால தடை உத்தரவை நீட்டித்து உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை அக்டோபர் 26-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com