நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: டிச.22-க்குள் விஷால் ஆஜராக உத்தரவு
நடிகர் ராதாரவி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நடிகர் சங்க செயலாளர் விஷால் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது.
விஷால் தலைமையிலான அணியினர் நடிகர் சங்கத்தில் பொறுப்பேற்ற பிறகு, அவர்களுக்கு முன்னதாக பொறுப்பு வகித்த நடிகர் சங்க தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் ராதாரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது, வழக்கில் முடிவெடுக்கும் வரை ராதாரவி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என விஷால் தரப்பில் நீதிமன்றத்தில் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் நடிகர் சங்க உறுப்பினர் பொறுப்பில் இருந்து நடிகர் ராதாரவியை நீக்கினர். நீதிமன்றத்தில் தந்த உறுதியை மீறி நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கியதை எதிர்த்து நடிகர் ராதாரவி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக நடிகர் விஷால் இன்று ஆஜராக வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் விஷால் இன்று ஆஜராகவில்லை. உடல்நிலை சரியில்லை என விஷால் தரப்பில் கூறப்பட்டது. இதனை ஏற்ற நீதிமன்றம் டிசம்பர் 22ஆம் தேதிக்குள் ஆஜராக கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.