மலையாள திரையுலகில் என்றும் இனிக்கும் காதல் பாடல்களை எழுதியவரான பிரபல திரைப்பட பாடலாசிரியர் பூவாச்சல் காதர் கொரோனாவுக்குப் பிந்தைய உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 73.
மலையாளத் திரையுலகில் 70கள், 80களில் பூவாச்சல் காதரின் மென்மையான காதல் பாடல்கள்தான் கோலோச்சின. சுமார் 50 ஆண்டுகாலம் மலையாளத் திரையுலகில் இவரது பாடல் வரிகள் இனிமை சேர்த்திருக்கின்றன. 400-க்கும் அதிகமான படங்களில் 1,500-க்கும் அதிகமான பாடல்களை பூவாச்சல் காதர் எழுதியிருக்கிறார்.
கொரோனா பாதிப்புடன் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு பூவாச்சல் காதர் காலமானார்.
1948 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம்தேதி பூவாச்சல் அருகே பிறந்த காதர், 1972 ஆம் ஆண்டு முதல் மலையாளத் திரைப்படங்களில் பாடல்களை எழுதி வந்தார். கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், பூவாச்சல் காதரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். காதரின் ’மறைவு இலக்கிய உலகுக்கு மிகப்பெரிய இழப்பு’ என்று பினராயி விஜயன் கூறியுள்ளார்.