’நான் அப்படி நடிக்க மாட்டேன்..’ ’ராம் சரண்’ படத்தை நிராகரித்த ’லப்பர் பந்து’ நடிகை!
லப்பர் பந்து திரைப்படத்தில் நடித்தவர் நடிகை ஸ்வாசிகா
ராம்சரண் படத்தில் நடிக்க மறுத்ததை பகிர்ந்த ஸ்வாசிகா
எனக்கும் மட்டும் இப்படி வருவதாக வேதனை
தமிழரசன் பச்சமுத்து இயக்கிய `லப்பர் பந்து' படம் மூலம் மிகப் பிரபலமானவர் நடிகை ஸ்வாசிகா. அப்படத்தில் கதாநாயகியின் அம்மாவாக முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். அதனையடுத்து சூரியின் `மாமன்', சூர்யாவின் `ரெட்ரோ' போன்ற தமிழ் படங்களில் நடித்திருந்தார்.
கேரளாவை சேர்ந்த ஸ்வாசிகா, பல மலையாள படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் நடித்துள்ள `வசந்தி' படம் மனோரமா மேக்ஸ் ஓடிடி தளத்தில் 28ம் தேதி வெளியாகவுள்ளது. அதற்கான புரமோஷன் பேட்டிகளை அளித்து வருகிறார். அப்படியான பேட்டி ஒன்றில் அவர் சொன்ன விஷயம் இப்போது அதிகம் பரவி வருகிறது.
ராம் சரண் படத்தை நிராகரித்த ஸ்வாசிகா..
ராம் சரண் நடிப்பில் புச்சி பாபு சனா இயக்கும் படம் `பெத்தி'. ஏ ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தில் ராம் சரணுக்கு அம்மாவாக நடிக்க தனக்கு அழைப்பு வந்ததாகவும், அதை மறுத்தது பற்றியும் கூறியுள்ளார் ஸ்வாசிகா. "எனக்கு தொடர்ந்து அம்மா வேடங்களிலேயே நடிப்பதற்கு வாய்ப்புகள் வருகின்றன. அதில் எனக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தது, நடிகர் ராம் சரணுக்கு அம்மாவாக நடிக்கக் கேட்டது. தெலுங்கில் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் 'பெத்தி' என்ற படம் அது. ஆனால் ராம் சரணுக்கு அம்மா என சொன்ன போது நான் மறுத்துவிட்டேன்." எனக் கூறினார்.
ஹனி ரோஸ் போன்ற நடிகைகள் தெலுங்கில் அம்மா ரோலில் நடித்திருக்கிறார்கள், அதற்கு ட்ரோலும் வந்தது என கேள்வி முன்வைக்கப்பட, "நான் நடித்தால் ட்ரோல் வருமா என்பதல்ல என் யோசனை. இப்போதைக்கு ராம் சரணின் அம்மாவாக நடிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அதனால், நான் மறுத்துவிட்டேன். எதிர்காலத்தில் அப்படி ஒரு சூழல் வந்தால், நான் அதை யோசிப்பேன்." என கூறினார்.
இதற்கு முன்பு ராம் சரணின் கேம் சேஞ்சர் படத்திலும் ராம் சரணை விட வயது குறைவான அஞ்சலி அவருக்கு அம்மாவாக நடித்திருப்பார். இந்த சூழலில் 40 வயதான ராம் சரணுக்கு, 33 வயதான ஸ்வாசிகா அம்மாவா எனப் பலரும் இது பற்றி சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஸ்வாசிகா அடுத்ததாக தமிழில் சூர்யா நடித்துள்ள `கருப்பு' படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.