சோதனை, வேதனை. சாதனை..முக்கலவை எஸ்எஸ்ஆர் !

சோதனை, வேதனை. சாதனை..முக்கலவை எஸ்எஸ்ஆர் !
சோதனை, வேதனை. சாதனை..முக்கலவை எஸ்எஸ்ஆர்   !

செக்கச்செவேலென கலர், அழகான முகம். அற்புதமான குரல் வளம் இப்படி பல பிரகாச அம்சங்கள் இருந்தும், ஜொலிக்க முடியாமல் நிழலாகவே போவது ஒரு விதமான கொடுமை. அதற்கு ஆளானவர்தான், சேடப்பட்டி நாராயண தேவர் ராஜேந்திரன், அதாவது, எஸ்எஸ்ஆர். கலைவாணர் துணைவியார் டி.ஏ.மதுரத்துடன் எம்ஜிஆர் ஜோடியாக நடித்த ஒரே படம் பைத்தியக்காரன். நாடு சுதந்திரம் பெற்ற இரண்டாவது மாதத்தில் வந்த படம். அதில்தான் சிறிய வேடம்  எஸ்.எஸ்.ஆர்க்கு. பின்னர் 1948ல் அபிமன்யு படம். உயிர் நண்பரான எம்ஜிஆரின் சிபாரிசு பேரில் அபிமன்யுவாக நடிக்க வாய்ப்பும், ஆயிரம் ரூபாய் அட்வான்சும் கிடைத்தது. ஆனால் எஸ்எஸ்ஆர் நடித்துக்கொண்டிருந்த நாடகசபை, சினிமாவில் நடிக்க காண்ட்ராக்ட்டிலிருந்து விடுக்க முடியாது என வழக்குபோட்டதால், ஜூபிடர் நிறுவனத்தின் பட வாய்ப்பு பறிபோனது.

அதே வருஷம், சேலம் மூர்த்தி பிலிம்ஸ் தயாரித்த ஸ்ரீஆண்டாள் படத்தில் வில்லன் ரோல். ஆனால் படத்தை மேற்பார்வையிட்ட மாடர்ன் தியேட்டர் சுந்தரம், தம்மாதுண்டு பையனா இருக்கான் என அதிருப்தியை தெரிவிக்க, உடனே படத்திலிருந்து எஸ்எஸ்ஆர் வெளியே வாரி போடப்பட்டார். நல்ல குரல் வளம் பெற்றிருந்ததால் பின்னணி பாடகராகி முன்னுக்கு வரலாம் என்று பார்த்தால், ஒரே பாடலோடு அதுவும் ஓடிப்போய்விட்டது. நொந்துபோன நிலையில் 1951 இல் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தயாரித்து இயக்கிய ‘மணமகள்’ படத்தில் கிடைத்தது, ஒரு பிச்சைக்காரன் வேடம். கருணாநிதியின் அனல்பறக்கும் வசனத்தில் புகுந்து விளையாடினார் எஸ்எஸ்ஆர்.  விதி இங்கே சென்சார்போர்டு வடிவத்தில் வந்தது. திராவிட ஆட்களுக்கும் சென்சாருக்கும் ஏழாம் பொருத்தம். 

எஸ்எஸ்ஆரின் பிச்சைக்காரன் வசனங்கள் அபாயகரமாகவும், புரட்சிகரமாகவும் உள்ளன என்று, அவர் நடித்த போர்ஷன்களையே ஸ்வாகா செய்துவிட்டது சென்சார் போர்டு. கடைசியில் ‘பராசக்தி’ படம்தான் எஸ்எஸ்ஆர்க்கு திருப்புமுனை படமாக அமைந்தது. மூன்று சகோரதரர்களில் ஒருவர் என முக்கியவேடம்.

‘பராசக்தி’ வெற்றியை தொடர்ந்தும் எஸ்எஸ்ஆர்க்கு சோதனைதான். பணம், மனோகரா, ரத்தக்கண்ணீர் என்ற மற்ற கதாநாயகன்களின் படங்களிலேயே அவர் இரண்டாம் ஹீரோகவாக பயணிக்க நேர்ந்தது.
 ஒரு வழியாய் ஏவிஎம் புண்ணியத்தில், முரசொலிமாறன் வசனம் எழுதிய ‘குலதெய்வம்’ படத்தில் கதாநாயகன் அந்தஸ்தை எட்டிப்பிடித்தார். 

படம் பெரிய அளவில் வெற்றி. 

அடுத்து முக்தா சீனுவாசன் இயக்கிய, முதலாளி (1957) படம். "ஏரிக்கரையின் மேலபோறவளே பெண் மயிலே" என்ற பாடல் பட்டிதொட்டியெல்லாம் ஒலிக்க படம் மெகா ஹிட்.
 
ஆனால் தெளிவில்லாத, சுவாரஸ்யமில்லாத கதைகளில் தொடர்ந்து நடிக்க எஸ்எஸ்ஆரின் பல படங்கள் காணாமல் போய்விட்டன. 

தொடர்ந்து களத்தில் இருப்பதற்காக ராஜாதேசிங்கு, ஆலயமணி, காஞ்சித்தலைவன் என எம்ஜிஆர் சிவாஜி படங்களில் இரண்டாம் ஹீரோவாக பாதுகாப்புடன் செல்லவேண்டிய கட்டாயம். 

இருந்தபோதிலும் சிவகங்கை சீமை, சாரதா, குமுதம், வானம்பாடி, நானும் ஒரு பெண் போன்ற படங்கள் எஸ்எஸ்ஆரை தவிர்க்கமுடியாத கதாநாயகனாகவே வைத்திருந்தன.

கே.பாலச்சந்தர் - சிவாஜி கூட்டணியில் படு ஃபிளாப்பான எதிரொலி (1970) படத்தோடு ஒதுங்கிவிட்ட எஸ்எஸ்ஆர், எண்பதுகளில்தான் மீண்டும் சினிமா பக்கம் எட்டிப்பார்த்தார். இரட்டை மனிதன் என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்தார். அதுவும் ஓடவில்லை. அதன்பின் சில படங்களில் கௌரவவேடம் அவ்வளவே. சினிமாவில் இப்படி தத்தளித்த எஸ்எஸ்ஆர், ஆரம்பகால அரசியல் வாழ்வில் நன்றாகவே முன்னேறினார். எம்ஜிஆர், திமுகவுக்கு வருவதற்கு முன்பாக அண்ணா வின் திரை தளபதிகளாக கோலேச்சிய மும்மூர்த்திகளில் கே.ஆர். ராமசாமி, சிவாஜி ஆகியோருடன், எஸ்எஸ்ஆரும் இருந்தார். அற்புதமான மேடைப்பேச்சால் திமுக மேடைகளை அலங்கரிக்கவும் செய்தார். 

தென்மாவட்டங்களில் திமுவுக்கு வலிமை சேர்க்கும் அளவுக்கு செல்வாக்கு பெற்றிருந்ததால், கட்சி 1957ல் சந்தித்த முதல் சட்டமன்ற தேர்தலிலேயே எஸ்எஸ்ஆர்க்கு சீட் வழங்கியது. துரதிஷ்டவசமாக அவர் வெற்றியை இழந்தார். இருந்தாலும் 1962 தேர்தலில் தேனி தொகுதியில் வென்று, இந்திய வரலாற்றிலேயே சட்டசபைக்கு செல்லும் முதல் நடிகர் என்ற சாதனையை படைத்தார்.

1964 இல் சுதந்திர தினம், சென்னை எல்டாம்ஸ்ரோட்டில் தன் வீட்டில் கருப்பு ஏற்றி திராவிட இயக்க கோஷம் போட்டார். போலீஸ் பட்டாளம் முற்றுகையிட்டது. கையில் ரிவால்வருடன் மொட்டைமாடியில் ஏறியவர், ‘என் வீட்டில் நான் எது வேண்டுமானாலும் செய்வேன். அதை கேட்க நீங்கள் யார்?’ என்று ஓங்கிச்சொல்லி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். 

ராஜ்யசபா எம்பி, அதிமுகவில் இருந்தபோது, தமிழ்நாட்டி லேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் சட்டமன்ற தேர்தலில் ஜெயித்த சாதனை என பல சிறப்பான அம்சங்கள் எஸ்எஸ்ஆர்க்கு உண்டு.

 அரசியலுக்கே உண்டான முன்னிலைப்படுத்திக் கொள்ளுதல் போன்ற சாதூர்யமான குணங்கள் இல்லாமல் வெள்ளந்தியாக இருந்தது, எஸ்எஸ்ஆரை பின் தங்கவைத்துவிட்டது. சரியாக செயல்பட்டிருந்தால் எம்ஜிஆர் வந்து இடத்திற்கு எஸ்எஸ்ஆர்தான் வந்திருப்பார்.

ஒருவேளை, பராசக்தி படத்தில் எஸ்எஸ்ஆர் கதாநாயகனாக இருந்து கருணாநிதியின் வசனங்களை சிவாஜியை விட சிறப்பாக பேசி படம் வெளி வந்திருந்தால், விதியின் வியப்பான விளையாட்டு எப்படி இருந்திருக்குமோ? காரணம், வசன உச்சரிப்பில் எஸ்எஸ்ஆர்க்கு அடுத்துதான் நான் என்று, சிவாஜியே ஒப்புக்கொண்ட வரலாறுதான்.

புராண படங்களில் நடிப்பதை தவிர்த்தால் லட்சிய நடிகர் என்று பட்டம் பெற்ற எஸ்எஸ்ஆர் என்ற மூன்றெழுத்தை சினிமாவில் சிவாஜி என்ற மூன்றெழுத்தும் அரசியலில் எம்ஜிஆர் மூன்றெழுத்தும் முன்னேறவிடாமல் செய்து விட்டன என்பதை மறுப்பதற்கில்லை.. 
லட்சிய நடிகர் எஸ்எஸ் ராஜேந்திரனின் நான்காவது நினைவு நாள் இன்று.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com