’காஞ்சனா’ இந்தி ரீமேக்: லாரன்ஸுடன் அடுத்த வாரம் சமரசப் பேச்சு!

’காஞ்சனா’ இந்தி ரீமேக்: லாரன்ஸுடன் அடுத்த வாரம் சமரசப் பேச்சு!
’காஞ்சனா’ இந்தி ரீமேக்: லாரன்ஸுடன் அடுத்த வாரம் சமரசப் பேச்சு!

காஞ்சனா' இந்தி ரீமேக்கை இயக்குவது குறித்து ராகவா லாரன்ஸூடன் அடுத்த வாரம் தயாரிப்பாளர்கள் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர்.

ராகவா லாரன்ஸ் இயக்கி, தயாரித்து நடித்த படம் ’காஞ்சனா’. இதில் சரத்குமார், லட்சுமி ராய், கோவை சரளா, தேவதர்ஷினி உட்பட பலர் நடித்திருந்தனர். 2011 ஆம் ஆண்டு வெளியாகி தமிழில் சூப்பர் ஹிட்டான இந்தப் படம், இப்போது இந்தியில் ’லக்‌ஷ்மி பாம் (Laxmmi Bomb)’  என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. அக்‌ஷய்குமார் ஹீரோ. ராகவா லாரன்ஸ் இயக்குனராக அறிவிக்கப்பட்டிருந்தார். கியாரா அத்வானி ஹீரோயின். 

பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் வழங்க, ஷமினா என்டர்டெயின்மென்ட் மற்றும் துஷார் என்டர்டெயின்மென்ட் ஹவுஸ் இணைந்து தயாரிக் கின்றனர். இந்தப் படத்தின் முதல் ஷெட்யூல் ஷூட்டிங் மும்பையில் நடந்தது. லாரன்ஸ் இயக்கினார். 

இந்நிலையில்,இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை அக்‌ஷய் குமார், தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டார். இது, இயக்குனர் ராகவா லாரன்ஸுக்கு தெரியாது. அவருக்குத் தெரியாமலேயே பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டதால் கோபமடைந்த ராகவா லாரன்ஸ், படத்தில் இருந்து விலகுவதாக தெரிவித்தார்.

 அதில். ’’படத்தின் இயக்குனரான எனக்கு தெரியாமலேயே பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது எனக்கு அவமரியாதையையும், வருத்தத்தையும் தந்துள்ளது’’ என்று தெரிவித்திருந்தார் அவர்.

ராகவா லாரன்ஸின் முடிவு சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர்கள் மும்பையில் கூடி ராகவா லாரன்ஸின் முடிவு பற்றி ஆலோசித்தனர். பின், ‘’படத்தின் இரண்டாவது ஷெட்யூல் செப்டம்பர் மாதம் மும்பையில் தொடங்குகிறது. தொடர்ந்து 40 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார் அக்‌ஷய்குமார். அதற்குள் பிரச்னை முடிந்துவிடும்’’ என்று படக்குழு கூறியிருந்தது.

இந்நிலையில் தன் முடிவை மறு பரிசீலனை செய்வதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்தி ருந்தார்.

’’லக்‌ஷ்மி பாம் படத்தில் நான் வெளியேறுவதை அறிந்ததும் எனது ரசிகர்களும் நடிகர் அக்‌ஷய் குமார் ரசிகர்களும் இந்தப் படத்தை இயக்குமாறு தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். அவர்கள் அன்பில் திக்குமுக்காடி போனேன். கடந்த ஒருவாரமாக ரசிகர்களை போல நானும் வருத்தத்தில் இருந்தேன். இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர்கள் என்னை சந்திக்க வருகின்றனர். எனது சுயமரியாதைக்கு பாதிப்பில்லாமல் வேலை செய்ய வாய்ப்பிருந்தால் எனது முடிவை மறுபரிசீலனை செய்வது பற்றி யோசிப்பேன்’’ என்று கூறியிருந்தார். 

இந்த சந்திப்பு நேற்று நடப்பதாக இருந்தது. ஆனால், தயாரிப்பாளர்கள் நேற்று வரவில்லை. அடுத்த வாரம் அவர்கள் வருவதாகத் தெரிவித் துள்ளனர். அன்று தயாரிப்பு தரப்புக்கும் ராகவா லாரன்ஸுக்கும் சமரச பேச்சுவார்த்தை நடக்க இருக்கிறது என்று லாரன்ஸ் தரப்பு தெரிவித் துள்ளது. 

இதற்கிடையே, அவர்களுக்குள் இருந்த மனக் கசப்பு நீங்கியதாகவும் ராகவா லாரன்ஸே அந்த படத்தைத் தொடர்ந்து இயக்குகிறார் என்றும் கூறப்படுகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com