‘வாரிசு vs துணிவு எது முதல்ல?; விஜய் உடன் நடிக்காததற்கு இதுதான் காரணம்’ - விஷால் ஓபன் டாக்

‘வாரிசு vs துணிவு எது முதல்ல?; விஜய் உடன் நடிக்காததற்கு இதுதான் காரணம்’ - விஷால் ஓபன் டாக்
‘வாரிசு vs துணிவு எது முதல்ல?; விஜய் உடன் நடிக்காததற்கு இதுதான் காரணம்’ - விஷால் ஓபன் டாக்

விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்க ஆசை என்றும், ‘தளபதி 67’ படத்தில் நடிக்காததற்கான காரணம் என்னவென்றும் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஷாலின் ‘லத்தி’ திரைப்படம் வரும் 22 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ள நிலையில், திருச்சி எல்.ஏ. சினிமாஸ் திரையரங்கில் இன்று படத்தின் கதாநாயகன் நடிகர் விஷால் உள்ளிட்ட திரைப்பட குழுவினர் பட புரோமஷனுக்காக வந்திருந்தனர். அப்போது திரையரங்கில் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. தொடர்ந்து ரசிகர்களிடம் பேசிய விஷால், “இலங்கை அகதிகள் முகாமில் என் திரைப்படத்தை திரையிட வேண்டும் என அனுமதி கோரியிருந்தனர். ஆனால் அது நிராகரிக்கப்பட்டுள்ளது, அது ஏன் என தெரியவில்லை. ‘லத்தி’ படத்திற்கும் அனுமதி கேட்பேன்.

‘லத்தி’ படத்திற்கு விற்பனையாகும் ஒவ்வொரு டிக்கெட்டிலிருந்து 1 ரூபாய் விவசாயிகளுக்கு தரப்படும். இந்தப் படத்தை பார்த்தவுடன் விஷால் நன்றாக நடித்துள்ளார் எனக் கூறுவதை விட, யுவன் கலக்கி விட்டார் என தான் கூறுவீர்கள். நடிகர் சங்கத்தில் என்ன உறுதி கொடுத்தேனோ, அதை நிறைவேற்றுவேன்” என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஷால், “ ‘லத்தி’ படத்தில் போலீஸ் உயர் அதிகாரியாக நடித்திருந்தால், அதில் வித்தியாசம் தெரிந்திருக்காது. தற்போது கான்ஸ்டபிளாக நடித்திருப்பது தான் இந்த படத்தின் வித்தியாசம். இந்தப் படத்தில் கடைசி 45 நிமிடங்கள் எந்தப் படத்திலும் இல்லாத அளவிற்கு இருக்கும். ஓ.டி.டி 20 முதல் 25 சதவீதம் சினிமா பார்க்கும் மக்களை எடுத்து சென்று விட்டது. இருந்தப்போதும் நல்ல கதை அம்சம் இருக்கும் திரைப்படங்களை பார்க்க மக்கள் திரையரங்கிற்கு வருகிறார்கள். ஓ.டி.டியால் பார்வையாளர்கள் குறையவில்லை, பிரிந்து தான் இருக்கிறார்கள்.

விஜய் படத்தில் நடிக்க எனக்கு எந்த தயக்கமும் இல்லை. ஆனால் பல படங்கள் இருப்பதால், என்னால் நடிக்க முடியாது. நடிகர் சங்க கட்டிடம் ஏற்கனவே கட்டி முடித்திருப்போம். ஆனால் தேர்தலை நிறுத்தி மூன்று ஆண்டுகள் காலம் தாழ்த்தியதால் தான் அந்த பணி நிறுத்தப்பட்டுள்ளது. விரைவில் அதைக் கட்டுவோம். என் நண்பர்களான ராஜா, மகேஷ் ஏற்கனவே அமைச்சர்களாக இருக்கிறார்கள். தற்போது அந்த வரிசையில் உதயநிதியும் இணைந்துள்ளார். அது எனக்கு பெருமையாக உள்ளது. நடிகர் சங்கத்தின் கோரிக்கைகளை உரிமையுடன் அவர்களிடம் கேட்பேன்.

விஜய்யை வைத்து படம் இயக்க வேண்டும் என்பது என் ஆசை. நேரமும், காலமும் வரும் போது நல்ல கதையாக விஜய்யிடம் கூறுவேன். தொடர்ச்சியாக படம் நடித்துக்கொண்டு இருக்கிறேன். அரசியலுக்கு வருவது தொடர்பாக அதற்குரிய காலம் வந்தால் தான் பதில் கூற முடியும். ‘துப்பறிவாளன் 2’ படம் அடுத்தாண்டு வெளியிடப்படும். மிஷ்கினுடன் மீண்டும் இணைய நான் தயாரில்லை” இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில், ‘இந்தியா டூடே’வுக்கு அளித்துள்ளப் பேட்டியில் நடிகர் விஷாலிடம், அஜித்தின் ‘துணிவு’ படத்தை முதலில் பார்ப்பீர்களா? இல்லை விஜய்யின் ‘வாரிசு’ படத்தைப் பார்ப்பீர்களா என கேள்வி எழுப்பப்பட்டதற்கு, விஜய்யின் ‘வாரிசு’ படத்தைத்தான் முதலில் பார்ப்பேன், அடுத்ததாக அஜித்தின் ‘துணிவு’ படத்தை பார்ப்பேன் என்று தெரிவித்துள்ளார். மேலும், அவரின் திருமணம் குறித்த கேள்விக்கு, பிரபல தெலுங்கு திரையுலக நடிகரான பிரபாஸ் திருமணம் செய்யும் நாளில் தான், நானும் திருமணம் செய்து கொள்வேன் என நகைச்சுவையாக கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com