‘நான் சொன்ன கருத்தைத்தான் பிரதமரும் எதிரொலிக்கிறார்‘ - கிச்சா சுதீப்பின் புதிய கமெண்ட்!

‘நான் சொன்ன கருத்தைத்தான் பிரதமரும் எதிரொலிக்கிறார்‘ - கிச்சா சுதீப்பின் புதிய கமெண்ட்!
‘நான் சொன்ன கருத்தைத்தான் பிரதமரும் எதிரொலிக்கிறார்‘ - கிச்சா சுதீப்பின் புதிய கமெண்ட்!

மொழி குறித்து தான் கூறிய கருத்தைத்தான் பிரதமர் நரேந்திர மோடியும் தெரிவித்திருப்பதாக கன்னட நடிகர் கிச்சா சுதீப் தெரிவித்துள்ளார்.

கடந்த சில வருடங்களாக தென்னிந்திய மொழிகளில் உருவாகி வரும் திரைப்படங்கள், இந்தியிலும், உலக அளவிலும் கவனத்தை பெற்று வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் சாதனை புரிந்து வருகின்றன. இதையடுத்து கடந்த மாதம் திரைப்பட விழா ஒன்றில் கலந்துகொண்ட கன்னட நடிகர் கிச்சா சுதீப், இந்தி தேசிய மொழி அல்ல என்று கருத்து தெரிவித்திருந்தார். இதையடுத்து பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், இந்தி தான் நமது தாய் மொழி, தேசிய மொழி என்று கருத்து தெரிவித்திருந்தார். அதன்பிறகு இருவரும் ட்விட்டரில் மாறி மாறி கருத்துக்கள் தெரிவித்ததால் பெரும் சர்ச்சையாக இது மாறியது.

அதன்பிறகு இந்த விவகாரத்தை இருவரும் விட்டுச் சென்றாலும், இந்த மொழி சர்ச்சை விவகாரம் முடியாமல் கருத்து மோதல்கள் நிலவி வந்தன. தமிழகத்திலும் தொடர்ந்து இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு நிலவி வருகிறது. இதற்கிடையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற பா.ஜ.க அலுவலக பொறுப்பாளர்களுக்கான மாநாட்டில் இணைய வழியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, “நாட்டின் ஒவ்வொரு மாநிலத்தின் மொழியும் இந்தியாவின் அடையாளம் தான்.

கடந்த சில நாட்களாக, மொழி அடிப்படையில் சர்ச்சைகளைக் கிளப்ப சில முயற்சிகள் நடப்பதைப் பார்க்கிறோம். பாஜக ஒவ்வொரு மாநில மொழியிலும் இந்தியக் கலாச்சாரத்தின் பிரதிபலிப்பைப் பார்க்கிறது. அவற்றை வணங்குகிறது. தேசிய கல்விக்கொள்கையில் கூட அனைத்து பிராந்திய மொழிக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளோம்” என மொழி குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடியின் பேச்சை வரவேற்றுள்ள கன்னட நடிகர் கிச்சா சுதீப், தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, “இந்தி இனி நமது தேசிய மொழி அல்ல என்று கூறி, நான் கலகத்தையோ விவாதத்தையோ உருவாக்க முயற்சி செய்யவில்லை. எந்தவித நோக்கமுமின்றி தன்னிச்சையாக நிகழ்ந்தது அது. எனது கருத்தை நான் முன்வைத்தேன். பிரதமரின் வார்த்தைகளில் இது வெளிப்பட்டது ஒருவித பெருமையாகவும், பாக்கியம் நிறைந்ததாகவும் இருந்தது.

தங்களது மொழியை மரியாதையோடு பார்க்கும் ஒவ்வொருவருக்கும் அவர் பேசியுள்ளதைப் பார்க்கும்போது நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. நான் கன்னட மொழிக்காக மட்டும் பேசவில்லை. எல்லா மொழிகளும் மதிக்கப்பட வேண்டும் என்று மோடி பேசியுள்ள கருத்தைத்தான் நானும் அன்றைக்கு முன்வைத்தேன். பிரதமர் தெரிவித்துள்ள கருத்தால், அனைவரின் தாய்மொழியும் மதிக்கப்பட்டுள்ளது. மோடியை அரசியல்வாதியாக மட்டும் பார்க்காமல், ஒரு தலைவராகவும் பார்க்கிறோம்" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com