25 ஆண்டுகளுக்குப் பிறகு “கேணி”க்காக சேர்ந்து பாடிய எஸ்பிபி-ஜேசுதாஸ்

25 ஆண்டுகளுக்குப் பிறகு “கேணி”க்காக சேர்ந்து பாடிய எஸ்பிபி-ஜேசுதாஸ்
25 ஆண்டுகளுக்குப் பிறகு “கேணி”க்காக சேர்ந்து பாடிய எஸ்பிபி-ஜேசுதாஸ்

“ஃப்ராகிரண்ட் நேச்சர் ஃப்லிம் கிரியேஷன்ஸ்” சார்பாக சஜீவ் பீ.கே, ஆன் சஜீவ் ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் "கேணி". தமிழ் மற்றும் மலையாளம்  இரு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும் இப்படத்தை கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருப்பவர் இயக்குநர் எம்.ஏ.நிஷாத். இவர் இதற்கு முன் மலையாளத்தில் ஏழுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியவர். 

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் ஜெயப்ரதா, பார்த்திபன், ரேவதி, ரேகா, அனுஹாசன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக சுஹாசினி மணிரத்னம் கலந்துகொண்டார். 

இந்நிகழ்ச்சியில் பார்த்திபன்  பேசுகையில், “இந்த நிகழ்ச்சி நடைபெரும் இடம் க்ரீன் பார்க், பசுமைப் பூங்கா. இந்த இடம் மட்டுமே பசுமைப் பூங்காவாக இல்லாமல், இந்த நாடே பசுமைப் பூங்காவாக மாற வேண்டுமெனில் முக்கியமாக தண்ணீர் தேவை. ஆன்மீக அரசியலைப் பற்றி சமீபத்தில் நீங்கள் அறிந்திருப்பீர்கள், இது நீர் அரசியலைப் பேசும் படம். இந்த நாட்டில் தண்ணீர் பிரச்சினை தீர வேண்டுமெனில் நதிகளை இணைக்க வேண்டுமென எல்லோரும் சொல்கிறார்கள். அதற்கு மனித மனங்களை இணைக்க வேண்டும். அப்படி இதயங்களை இணைக்கும் ஒரு படமாக நிச்சயமாக “கேணி” இருக்கும். இந்தியா சுதந்திரமடைவதற்கு முன்பு கேரள எல்லைக்குள் பிரிக்கப்படுகிற தமிழகத்தைச் சேர்ந்த கிணற்றுக்காக கேரளத்தைச் சேர்ந்த பெண் ஒருவருடன் சேர்ந்து தமிழர் ஒருவர் போராடுவதே “கேணி” படத்தின் கதை. இந்தப் படத்தை எடுத்திருப்பதும் ஒரு மலையாளி. பொதுவாக நீர் பிரச்சனை என்பது தமிழர்கள் சம்பந்தப்பட்டதோ, மலையாளிகள் சம்பந்தப்பட்டதோ இல்லை. அது மனிதர்கள் சம்பந்தப்பட்டது. தண்ணீரை வைத்துக் கொண்டு  கேரளாவோ தமிழ்நாடோ அரசியல் செய்யலாம், ஆனால் கலைஞர்கள் அந்த அரசியலுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள். ஏனென்றால் ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எங்களுக்கு  கவலையில்லை, பிரச்சனைகளைப் பேசிக்கொண்டேதான் இருப்போம்.

தமிழகத்தை விட கேரளாவில் கலைஞர்களுக்கான சுதந்திரம் என்பது அதிகமாக இருக்கிறது, அது பாராட்டிற்குரியது. அங்கே திருவனந்தபுரம் ராஜாவைக் கூட விமர்சனம் செய்யலாம், இங்கே யாரையுமே விமர்சனம் செய்ய முடிவதில்லை. அதனால் தான் நல்ல விசயத்தை சொல்லும் இந்த “கேணி” படத்திற்குள் என்னையும் இணைத்துக் கொண்டேன். எனக்கு பெரியார் விருது கொடுத்த போது சில விஷயங்கள் பேசினேன். அதற்கு கூட சமூக வலைதளங்களில் என்னை விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள், அந்தளவிற்கு சகிப்புத் தன்மை இல்லாமல் போய்விட்டது. அந்த வகையில் பார்க்கப் போனால் கருத்து சுதந்திரத்தில் தமிழகத்தை விட கேரளம் சிறந்து விளங்குகிறது.” என்று பேசினார்.

ஜெயப்ரதா, “எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. ஏனென்றால் நினைத்தாலே இனிக்கும், சலங்கை ஒலி, ஏழைஜாதி, தசாவதாரம் இப்போது கேணி என தமிழில் நல்ல படங்களில் நடித்திருக்கிறேன். இந்தக் கேணி படத்தில் நான் நடித்திருக்கும் “இந்திரா” கேரக்டர், என் மனதிற்கு மிக நெருக்கமாக மாறிப்போயிருக்கிறது. எல்லோரும் பெண்கள் முன்னேற்றம் பற்றி பேசிக்கொண்டே இருக்கிறோம், ஆனால் இந்தச் சமூகத்தை பெண்கள் தான் வழிநடத்த வேண்டும் என “கேணி” பேசியிருக்கிறது. தண்ணீர் என்பது தமிழ்நாடு சம்பந்தப்பட்டதோ, கர்நாடகா, கேரளா சம்பந்தப்பட்டதோ கிடையாது அது உலகளாவிய பிரச்சினை. அப்படி ஒரு உலகளாவிய பிரச்சினையை கதையாக்கி, அதில் என்னையும் நடிக்க வைத்ததற்காக இயக்குநர் நிஷாத்திற்கு நன்றிகள். இன்னும் குறிப்பாக “கேணி” படத்திற்காக 25 வருடங்களுக்குப் பிறகு ஏசுதாஸ் அவர்களும், எஸ்.பி.பி அவர்களும் இணைந்து பாடியிருப்பது எங்களுக்கெல்லாம் பெருமை.” என்று பேசினார்.

சுஹாசினி மணிரத்னம், “நீண்ட நாட்களுக்குப் பிறகு கோடம்பாக்கம் வந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. முன்பெல்லாம் மோகன்லால், மம்மூட்டி, ராஜ்குமார் இவர்களெல்லாம் பக்கத்து படப்பிடிப்பு தளத்தில் இருப்பார்கள், நாங்கள் தேடிப்போய் சந்தித்து வருவோம். அந்த நினைவைத் தருகிறது இந்த “கேணி” இசை வெளியீட்டு விழா. அடித்தட்டு வர்க்கமாக இருந்தாலும், மேல்த்தட்டு வர்க்கமாக இருந்தாலும் தண்ணீர் இல்லாமல் போனால் முதலில் பாதிக்கப்படுவது பெண்கள் தான். அதை உணர்ந்து பெண்களை மையப்படுத்தி இந்தப் படத்தை உருவாக்கியிருப்பது உண்மையிலே பாராட்டிற்குரியதுதான்.” என்று பேசினார்.

இயக்குநர் எம் ஏ நிஷாத், “மலையாளத்தில் “கிணறு” எனது ஏழாவது படம். தமிழில் “கேணி” என் முதல் படம். எனது முந்தைய படங்களைப் போலவே கேணியும் சமூகம் சார்ந்த படம்தான். இந்தப் பூமியில் இருக்கிற எல்லா உயிர்களுக்கும் பொதுவான தண்ணீரை, மனிதன் எப்படி சொந்தம் கொண்டாட முடியும் என்ற கேள்வியை கேணியின் வாயிலாக எழுப்பியிருக்கிறேன்.” என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com