விவசாயிகள் குறித்து அவதூறு: கங்கனா மீது எஃப்.ஐ.ஆர் பதிய போலீஸுக்கு நீதிமன்றம் உத்தரவு
விவசாயிகள் போராட்டத்தை விமர்சித்து ட்வீட் செய்த விவகாரத்தில் கங்கனா ரனாவத் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய காவல்துறைக்கு கர்நாடக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கங்கனா விவசாய சட்டத்திற்கு எதிராகவும், சிஏஏ-வுக்கு எதிராகவும் போராட்டம் செய்பவர்களை விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதுதொடர்பாக கர்நாடக நீதிமன்றத்தில் ரமேஷ் நாயகம் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கங்கனா ரனாவத் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யுமாறு கர்நாடகாவின் துமகுரு மாவட்டத்தில் உள்ள க்யாதசந்த்ரா காவல்நிலைய ஆய்வாளருக்கு உத்தரவிட்டது.
முன்னதாக ட்விட்டரில் பதிவிட்டிருந்த கங்கனா, சிஏஏ குறித்து பலர் தவறான தகவல்களை பகிர்ந்ததால் கலவரங்கள் ஏற்பட்டதாகவும், அதே நபர்கள் தற்போது விவசாய சட்டத்திற்கு எதிராக தவறான தகவல்களை பகிர்ந்து வருவதாகவும் கூறியிருந்தார். அவர்கள் தேசத்தில் தீவிரவாதத்தை ஏற்படுத்துவதாகவும், அவர்கள் அனைவரும் தீவிரவாதிகள் எனவும் குறிப்பிட்டிருந்தார். தான் யாரை குறிப்பிடுகிறேன் என்பது அனைவருக்கு தெரியும் எனவும், அவர்கள் தவறான தகவல்களை பகிர்பவர்கள் என்றும் தெரிவித்திருந்தார்.