கற்ற வித்தையை அனைவருக்கும் கற்றுக்கொடுக்க உள்ள பாரதிராஜா சமண முனிவருக்கு ஈடானவர் கமலஹாசன் புகழாரம் சூட்டியுள்ளார்.
இன்று நடைபெற்ற பாரதிராஜா பன்னாட்டு திரைப்பட பயிற்சி நிறுவனத்தின் துவக்க விழாவை நடிகர் ரஜினிகாந்த் தொடங்கி வைத்தார். விழாவில் நடிகர்கள் கமலஹாசன், நாசர், சிவகுமார், கார்த்தி, வைரமுத்து மற்றும் இயக்குனர்கள் பார்த்திபன், பாண்டிராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய நடிகர் கலமஹாசன், கற்ற வித்தையை அனைவருக்கும் கற்றுக்கொடுக்க உள்ள பாரதிராஜா சமண முனிவருக்கு ஈடானவர். தடைகளை தாண்டி கலைஞனை உருவாக்கத் தெரிந்தவர். சினிமா என்பது பல பேர் சேர்ந்து உருவாக்கும் ஒரு ஜனநாயக கலை என அவர் புகழாரம் சூட்டினார். பின்னர் புதியதலைமுறையிடம் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தேசிய விருது வழங்குவதில் பாகுபாடு காட்டுவதாக தெரிவித்த கருத்து குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கமலஹாசன், தேசிய விருது தேர்வு செய்வதில் நல்லதும் இருக்கும், கெட்டதும் இருக்கும். தேசிய விருது தேர்வுக்குழுவில் 12 பேர் உள்ளனர் என அவர் தெரிவித்தார்.
விழாவில் பேசிய வைரமுத்து மண்ணுக்கு பெருமை சேர்க்கும் படங்களை பாரதிராஜாவின் புதிய பயிற்சி பட்டறை உருவாக்கும் என நம்புகிறேன். மிக வேகமான தொழில்நுட்ப உலகத்தில் தலைமுறைகள் மாறிக்கொண்டே உள்ளன. மண்ணின் கலைஞர், ஊர் வாசம், மக்களின் எண்ண ஓட்டத்தை அறிந்தவர் பாரதிராஜா. திரையுலகில் மிகப்பெரிய ஆளுமையாக நான் பாரதிராஜாவை உணர்ந்தேன் என அவர் தெரிவித்தார்.