சோகத்தில் இருந்து ‘மகிழ்ச்சிக்கு’ மாறிய ரஜினி: ஏன்? எதற்கு? எப்படி?

சோகத்தில் இருந்து ‘மகிழ்ச்சிக்கு’ மாறிய ரஜினி: ஏன்? எதற்கு? எப்படி?

சோகத்தில் இருந்து ‘மகிழ்ச்சிக்கு’ மாறிய ரஜினி: ஏன்? எதற்கு? எப்படி?

‘காலா’ இசை வெளியீட்டு விழா சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று மாலை நடைபெற இருக்கிறது. அதற்கு முன்பாகவே பாடல்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது படக்குழு. ஆனாலும் வழக்கம்போல் இசை விழாவில் எந்த மாற்றமும் இருக்கப்போவதில்லை. ரஜினி‘கோச்சடையான்’ படத்திற்குதான் கடைசியாக இசை வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்திருந்தார். ஆனால் அந்தப் படம் சரியாக போகவில்லை. அதன் வெற்றி விழாவில் அதிகமாக பேச இருக்கிறேன் என்று ரஜினி கூறியிருந்தாலும் அதற்கான சந்தர்ப்பத்தை ஆடியன்ஸ் அவருக்கு ஏற்படுத்தி தரவில்லை. அந்த வகையில் ரஜினி பெரிய அளவில் அப்செட் ஆனார். 

தன் மகள் செளந்தர்யா இயக்கத்தில் உருவான ‘கோச்சடையான்’ படத்தைவிட ‘கபாலி’க்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் என்ன காரணமோ ரஜினி அதற்கு இசை விழா வைக்கக் கூடாது என அதன் தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவிற்கு கட்டளை போட்டுவிட்டார். பெரிய அளவில் விழாவை எதிர்பார்த்திருந்த தயாரிப்பாளர் உட்பட அவரது ரசிகர்கள் அப்செட் ஆனார்கள். ரஜினிக்கு ரசிகர்கள் கொடுத்த அதிர்ச்சியை அவர் திருப்பி ரசிகர்களுக்கு வழங்கிய தருணமாக ‘கபாலி’ அமைந்தது. போகும் இடம் எல்லாம் தாணுவை பலரும் கேள்வி எழுப்பினர். ஏன்? விழா வைக்கவில்லை என நச்சரித்தனர். ரஜினி நேரம் ஒதுக்கினால் செய்யலாம். அதன் நூறாவது நாளை மிக பிரம்மாண்டமாக கொண்டாடுவோம்; அப்போது அதில் ரஜினி கலந்து கொள்வார் என்றார்கள். ஆனால் அதுவும் நடக்கவே இல்லை.

‘கபாலி’யை ரஜினி தனது வெற்றி படம் என்றார். ஆனால் அதை அவர் கொண்டாட விரும்பவில்லை. தனது சினிமா வாழ்க்கையில் ரஜினிக்கு அது வழக்கமான ஒரு படமாக இருந்திருக்கலாம். ஆனால் அது இயக்குநர் ரஞ்சித்திற்கு ஒரு மைல்கல் திரைப்படம். ‘அட்டகத்தி’ மூலம் மிக சாதாரண இயக்குநராக திரை உலகிற்குள் உள்ளே புகுந்த ரஞ்சித்திற்கு, அதே திரை உலகில் உச்ச நடிகரை இயக்க கிடைத்த முதல் வாய்ப்பு என்ற அளவில் அது சிறப்பான படம். அந்த மகிழ்ச்சியை அவரால் கொண்டாட முடியவில்லை. 

இந்த நிலையில்தான் அவர் இரண்டாவது முறையாக ரஞ்சித்துடன் கைகோர்த்தார். முதலில் ரஞ்சித் உடன் ரஜினி படம் பண்ண முன்வந்ததே பெரும் வியப்பு. அந்த வியப்பு அடங்குவதற்குள்ளாக அவர் அடுத்த வியப்பை அளித்தார். ஆக, அடக்கி வைத்து கொண்டிருந்த ரஞ்சித் படக்குழுவினருக்கு இந்தநாள் கொண்டாட்டமான நாள். முதல் படத்தில் அடக்கி வைத்திருந்த ஆசை எல்லாம் அள்ளித் தெளிக்கப்போகிறார்கள். அதற்காகதான் வழக்கமான திரையரங்கத்தில் உள்ளே நடைபெறும் இசை வெளியீட்டு விழாவை மைதானத்திற்கு மாற்றி தந்திருக்கிறார் ரஜினி. 

தனது ‘கோச்சடையான்’ தோல்வி மனை நிலை அவரை ‘காபாலி’யை கொண்டாட விடாமல் தடுத்தது. இப்போது ‘கபாலி’ வெற்றி அதையொட்டி அரசியல் எண்ட்ரி என உற்சாக உலகத்தில் இருக்கிறார் ரஜினி. அந்த சந்தோஷத்தின் அடையாளம்தான் ‘காலா’. காலா என்றால் கறுப்பு. கறுப்பு உழைப்பின் அடையாளம். ஆக, அரசியல் கலத்தில் உழைக்க உறுதி எடுத்துள்ளார். அதன் ஒருகட்டமாகதான் அவரது ‘ரஜினி மக்கள் மன்ற’த்தினர் திரளாக அழைக்கப்பட்டுள்ளனர். 10 ஆயிரம் பேர் கூடுவர் என்கின்றனர். இந்தக் கூட்டம் நிச்சயம் சினிமாவிற்கானதல்ல.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com