’கங்குவா படத்திற்கு வந்த கடுமையான விமர்சனங்கள் அநீதியானது..’ – ஜோதிகா!
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த படம் ‘கங்குவா’. ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் இணைந்து தயாரித்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசைமையத்திருந்தார். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவும், மதன் கார்க்கி வசனங்களிலும் வேலை செய்திருந்தனர். நிசாத் யூசூப் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டிருந்தார்.
படம் வெளியாவதற்கு முன்பே ‘2000 கோடி வசூல் செய்யப்போகிறது, படத்தை இந்தியாவே திரும்பி பார்க்கப்போகிறது’ என்றெல்லாம் அதிகப்படியான புரோமோசன்கள் செய்யப்பட்டது.
ஆனால் படம் வெளியான பிறகு படத்தின் கதையை தாண்டி, திரைப்படத்தில் சத்தம் அதிகமாக இருக்கிறது உட்கார்ந்து பார்க்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டையே ரசிகர்கள் அதிகமாக வைத்தனர். படத்தின் கதையை கடந்து பின்னணி இசையில் இருந்த குறைபாடுகளாலும், 2000 கோடி வசூல் என சொன்னவர்கள் எப்படி இதைக்கூட கவனிக்காமல் படத்தை வெளியிட்டனர் என்ற விரக்தியாலும் அதிகப்படியான விமர்சனங்கள் கங்குவா மீது வைக்கப்பட்டது.
இதைக்கடந்து படத்தில் சத்தம் அதிகமாக இருப்பதை ஆஸ்கார் விருது வாங்கிய ரசூல் பூக்குட்டியும் விமர்சித்திருந்தார்.
இந்தசூழலில் படத்திற்கு அதிகமாக வந்த எதிர்வினைகளை பொறுத்துகொள்ள முடியாத ஜோதிகா, படம் வெளியான போதே எதற்கு இவ்வளவு கடுமையான விமர்சனங்கள் என கருத்து வெளியிட்டு ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில் தற்போதும் அவருடைய கருத்தில் பின்வாங்காமல் அதையே கூறியுள்ளார்.
பல மோசமான படங்களை விட கடுமையாக விமர்சிக்கப்பட்டது!
சமீபத்திய பேட்டி ஒன்றில், கணவர் படத்தின் மீதான விமர்சனங்கள் பற்றிய கேள்விக்கு பதிலளித்த ஜோதிகா, ”தென் இந்தியாவில் பல மோசமான கமர்ஷியல் படங்கள் வெற்றியடைந்துள்ளன. விமர்சனங்களில் கூட அவை கரிசனத்துடன் அணுகப்பட்டுள்ளன. ஆனால் என் கணவரின் படம் மிக கடுமையாக விமர்சிக்கப்பட்டதாக உணர்ந்தேன். படத்தின் சில பகுதிகளில் குறை இருந்திருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்தமாக மிகுந்த உழைப்பு போடப்பட்ட, தனித்துவமான படம் அது.
மற்ற மோசமான படங்களைக் காட்டிலும், இந்தப் படத்திற்கு கடுமையான விமர்சனங்கள் வந்ததைப் பார்த்து கவலை அடைந்தேன். இது ஒரு அநீதியாக எனக்குத் தோன்றியது” என்று கூறியுள்ளார்.