நான் ஸ்பேஸ் திரில்லர் படத்தில் நடிப்பதை யாரும் நம்பவில்லை: ஜெயம் ரவி

நான் ஸ்பேஸ் திரில்லர் படத்தில் நடிப்பதை யாரும் நம்பவில்லை: ஜெயம் ரவி
நான் ஸ்பேஸ் திரில்லர் படத்தில் நடிப்பதை யாரும் நம்பவில்லை: ஜெயம் ரவி

நான் ஸ்பேஸ் திரில்லர் படத்தில் நடிப்பதை யாரும் நம்பவில்லை என்று சென்னையில் நடந்த டிக்டிக்டிக் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ஜெயம் ரவி தெரிவித்தார்.

நேமிசந்த் ஜபக் சார்பில் வி ஹித்தேஷ் ஜபக் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘டிக் டிக் டிக்’. இந்தியாவின் முதல் ஸ்பேஸ் திரில்லர் படமாக உருவாகியிருக்கும் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் சக்தி சௌந்தர்ராஜன். இதில் ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ஜெயபிரகாஷ், வின்சென்ட் அசோகன், ரமேஷ் திலக், ரித்திகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இதற்கு டி இமான் இசையமைத்திருக்கிறார். இவருக்கு இந்த படம் 100 ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டனர்.  

பாடலாசிரியர் மதன் கார்க்கி பேசும் போது, ‘‘இந்தப் படத்தின் நாயகன் விதவிதமான கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடிப்பதால் எங்களால் வித்தியாசமான பாடல்களை எழுத முடிகிறது. அவர் வனமகன் படத்தில் நடித்தபோது, காடு மற்றும் இயற்கையை பற்றி எழுதினேன். வனமகன் படத்தில் காட்டிற்குள் தொங்கிக் கொண்டு நடித்தார். இந்தப் படத்திற்கு அரங்கத்திற்குள் தொங்கி கொண்டு நடித்தார். அவரது கடுமையான உழைப்பிற்கு இந்தப் படம் மிகபெரிய வெற்றியைக் கொடுக்கும். 
இமானுக்கு இது நூறாவது படம். நான் கூட அவரிடம் நீங்கள் இசையமைப்பாளர் சந்திரபோஸ் காலத்திலிருந்து திரையுலகில் இருக்கிறீர்கள் என்றேன். உடல் எடையை குறைத்துக் கொண்டு இளமையாகி இருக்கிறார். ஒருநாள் அவரிடம் திடீரென்று உங்களுடைய வயது என்ன? என கேட்டேன். முப்பத்தி நான்கு என்றார். எனக்கு 37 வயது ஆகிறது. இது தெரியாமல் இத்தனை நாள் அவரை சார் சார் என்று நான் அழைத்திருக்கிறேன். அவர் திரையுலகில் மிக இள வயதில் அறிமுகமாகியிருக்கிறார். இந்தப் படத்தில் யுவன் ஒரு பாடலை பாடியிருக்கிறார். அவர் அந்தப் பாடலை பாடுவதற்காக எடுத்துக் கொண்ட உழைப்பு என்னை வியக்க வைத்தது. இதற்காக இலங்கை மற்றும் வெளிநாடுகளிலிருந்து பாடல்வரிகளை சரியாக உச்சரித்து பாடியதற்காக யுவனுக்கு பாராட்டுகளும் குவிந்தது.” என்றார். 

நடிகை நிவேதா பெத்துராஜ், ‘‘இந்தப் படத்திற்காக என்னை இயக்குநர் ஐந்து நிமிடமே பார்த்தார். உடனே அந்த கேரக்டருக்காக தேர்ந்தெடுத்தார். அதற்காகவே நான் இந்தப் படத்தில் சண்டை காட்சிகளிலும் கூட துணிச்சலாக நடித்தேன். படபிடிப்பு கடினமாக இருந்தாலும், இந்தப் படக்குழுவினருடன் பணியாற்றியது மென்மையாக இருந்தது.” என்றார். 

நடிகர் ஜெயம் ரவி,‘‘ முதலில் நான் ஸ்பேஸ் திரில்லர் படத்தில் நடிக்கிறேன் என்ற சொன்னவுடன் யாரும் நம்பவில்லை. மிருதன் இயக்குநரின் இயக்கத்தில் நடிக்கிறேன் என்று சொன்ன பிறகும் யாரும் நம்பவில்லை. அதுசரி, இருபது வருடத்திற்கு முன் தண்ணீரை விற்கபோகிறேன் என்று சொல்லியிருந்தால் யாரும் நம்பியிருக்கமாட்டார்கள்.

இந்தப் படத்தின் அரங்கத்தை முதலில் காட்டிய பிறகுதான் படத்தின் மீது நம்பிக்கை அதிகரிக்கவைத்தது. அரங்கத்தின் அமைப்பே நான் உள்பட அனைத்து நடிகர்களின் பங்களிப்பை எளிதாக்கியது. ஏனெனில் ஸ்பேஸ் திரில்லர் என்று சொன்னவுடன் நடிகர்களுக்கு நடிக்கும் போது தயக்கம் இருக்கும். குழப்பம் இருக்கும். கேள்வி இருக்கும். ஆனால் இந்தப் படத்திற்காக போடப்பட்ட அரங்கத்தில் உண்மையான விண்வெளி ஆய்வகத்திற்கான உள்ளரங்க அமைப்பு டீடெயிலாக இருந்தது. இதற்காக கலை இயக்குநரை மனதாரப் பாராட்டலாம். இரண்டு மணி நேரம் பத்து நிமிட அளவிற்கு அற்புதமாக படத்தை எடிட் செய்திருக்கிறார் எடிட்டர். இதற்காக அவருக்கும் பாராட்டு தெரிவிக்கிறேன்.

இந்தப் படத்தின் மூலம் என்னுடைய மகன் ஆரவ் அறிமுகமாகியிருக்கிறார். அவனிடம், ஒருநாள் இயக்குநர் இதுபோல் ஒரு கேரக்டர் இருக்கிறது அதில் நடிக்கிறாயா? என கேட்டார் என்று சொன்னேன். ம் நடிக்கலாம். என்றான். அதற்கு டான்ஸ் தெரியவேண்டும் என்றேன். கத்துக்கலாம் என்றான் அவனுடைய இந்த ஆட்டிடியூட் படக்குழுவினரை கவர்ந்தது. அதனால் அறிமுகமாக்கியிருக்கிறேன். அவனுக்கு உங்களின் ஆதரவு தேவை. இதை தந்தையாகவும், சக கலைஞராகவும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.” என்றார். 

டி இமான் பேசுகையில்.‘‘இது என்னுடைய நூறாவது படம். இதற்காக இறைவனுக்கும், இங்கு கூடியிருக்கும் ரசிகர்களுக்கும் நன்றி சொல்கிறேன். இந்த நூறை ஒன்றுக்கு பின்னால் வரும் இரண்டு ஸீரோவாக பார்க்கவில்லை. இரண்டு ஸீரோவிற்கு பிறகு வரும் ஒன்றாகப் பார்க்கிறேன். இதிலிருந்து மீண்டும் புதியதாக இசைப்பயணத்தை தொடங்குகிறேன். தொடர்ந்து ஆயிரம் படங்களுக்கு மேல் பணியாற்ற விரும்புகிறேன்.” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com