உலகம் நடிகைகளை பார்க்கும் கண்ணோட்டத்தை மாற்றியவர் அம்மா; கங்கனா ரனாவத் தமிழில் ட்விட்
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்துவரும் நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்திதோடு தமிழில் ட்விட் செய்து மரியாதை செலுத்தியுள்ளார்.
தமிழகத்தின் ஆளுமையான முதல்வர்களில் ஒருவராக சொல்லப்படும் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி இதே நாளில் மறைந்தார். மக்களிடத்தில் செல்வாக்குப் பெற்ற தலைவர்கள் என்றாலே இந்தியாவில், அவர்களின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை எடுக்க இயக்குநர்கள் படையெடுப்பார்கள். அப்படித்தான், இயக்குநர் கெளதம் மேனனும், ஏ.எல் விஜய்யும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வராலாற்றுப் படத்தை இயக்க ஆர்வம் காட்டினார்கள்.
இயக்குநர் கெளதம் மேனன் ரம்யா கிருஷ்ணனை வைத்து ‘குயின்’ என்ற வெப் சீரிஸை இயக்கினார். ஏ.எல் விஜய் கங்கனா ரனாவத்தை வைத்து ‘தலைவி’ படத்தை இயக்கி வருகிறார். குயின் வெப் சீரிஸுக்கு கிடைத்த வரவேற்பு போலவே, தலைவிக்கும் கிடைக்கும் என்று எதிர்பாக்கப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பையும் கலவையான விமர்சனங்களையும் பெற்றநிலையில், இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் தலைவி குழு தீவிரமாக பணியாற்றி வருகிறது.
இன்று காலையில்தான் தலைவி படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் கங்கனா ரனாவத் தனது ட்விட்டர் பக்கத்தில், தலைவி பட புகைப்படங்களைப் பகிர்ந்திருக்கிறார்.
இந்நிலையில், ஜெயலலிதாவின் கெட்டப்பிலேயே தற்போது, அவரது படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி ”உலகம் நடிகைகளை பார்க்கும் கண்ணோட்டத்தை மாற்றிய, நமது புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நினைவு நாளில் மலரஞ்சலி செலுத்த பெருமைபடுகிறேன். பெண்மையைப் போற்றுவோம்” என்று தமிழில் ட்விட் செய்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.