”ஜெயில் படத்தின் ஒடிடி உரிமை குறித்து டிச.6 வரை எந்த முடிவும் எடுக்கக் கூடாது”-நீதிமன்றம்

”ஜெயில் படத்தின் ஒடிடி உரிமை குறித்து டிச.6 வரை எந்த முடிவும் எடுக்கக் கூடாது”-நீதிமன்றம்
”ஜெயில் படத்தின் ஒடிடி உரிமை குறித்து டிச.6 வரை எந்த முடிவும் எடுக்கக் கூடாது”-நீதிமன்றம்

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தொடர்ந்த வழக்கில்,ஜெயில் திரைப்படத்தின் ஒடிடி உரிமை குறித்து எந்த முடிவும் எடுக்கக்கூடாதென தயாரிப்பு நிறுவனமான கிரெய்க்ஸ் சினி கிரியேசன்ஸ்க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், அபர்ணநிதி, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயில்' திரைப்படத்தை, க்ரெய்க்ஸ் சினி கிரியேசன்சின் ஸ்ரீதரண் மாரிதாசன் தயாரித்துள்ளார்.
இத்திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க கோரி ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், படத்தை தயாரித்துள்ள கிரெய்க்ஸ் சினி கிரியேசன்ஸ் நிறுவனம் ஜெயில் திரைப்படத்தின் காப்புரிமை,
ஒடிடி உரிமை,சாட்டிலைட் உரிமை உள்ளிட்ட விநியோக உரிமையை ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கு வழங்கி கடந்த அக்டோபர் மாதம் 24 ம் தேதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.  படத்தின் விநியோக உரிமையை தங்கள் நிறுவனம் பெற்றிருந்த நிலையில், திடீரென தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஜெயில் படம் வரும் டிசம்பர் 9 ம் தேதி வெளிவர உள்ளதாகவும், தமிழ்நாடு திரைப்பட விநியோக உரிமையை எஸ்.எஸ்.ஐ ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அதுதவிர தயாரிப்பு நிறுவனம் ஜெயில் திரைப்படத்தின் சாட்டிலைட் மற்றும் ஒடிடி உரிமையையும் விற்க முயற்சி மேற்கொண்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த விநியோக உரிமையை தங்களுக்கு வழங்கிய ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள நிலையில்,தற்போது சட்டவிரோதமாக படத்தை வெளியிட முயற்சி நடப்பதால் அதற்கு தடை விதிக்க வேண்டுமென கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது, ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் படத்தின் விநியோக உரிமையை வழங்கிவிட்டு தற்போது வேறொரு நபர் மூலம் படத்தை வெளியிட முயற்சி செய்வதாக குற்றம்சாட்டப்பட்டது.

தயாரிப்பு நிறுவனம் கிரெய்க் சினி கிரியேசன்ஸ் தர்ப்பில், ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துக்கு காப்புரிமை வழங்கவில்லை எனவும்,
படத்தை வெளியிட தகுதியான விநியோகஸ்தரை தங்களுக்கு அறிமுகப்படுத்துமாறு மட்டுமே கமிஷன் அடிப்படையில் ஒப்பந்தம் மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து,ஜெயில் திரைப்படத்தின் ஒடிடி உரிமை குறித்து டிசம்பர் 6 ம் தேதி வரை இறுதி செய்வது போன்ற எந்த முடிவும் எடுக்கக்கூடாதென தயாரிப்பு நிறுவனமான கிரெய்க்ஸ் சினி கிரியேசன்ஸ் க்கு உத்தரவிட்ட நீதிபதி, திரையரங்க விநியோக உரிமை குறித்து வரும் திங்கள்கிழமை முடிவெடுக்கப்படும் என தெரிவித்து வழக்கு விசாரணையை அன்றைய தினத்திற்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com