வாரிசை ஓரங்கட்டிய வாத்தி.. எட்டு நாளில் இத்தனை கோடி வசூலா? அண்மைத் தகவல் இதோ!

வாரிசை ஓரங்கட்டிய வாத்தி.. எட்டு நாளில் இத்தனை கோடி வசூலா? அண்மைத் தகவல் இதோ!
வாரிசை ஓரங்கட்டிய வாத்தி.. எட்டு நாளில் இத்தனை கோடி வசூலா? அண்மைத் தகவல் இதோ!

கோலிவுட்டில் இருந்து பாலிவுட், ஹாலிவுட் வரை சென்ற நடிகர் தனுஷ் தற்போது தென்னிந்திய சினிமாவின் டோலிவுட்டையும் விட்டு வைக்கவில்லை. வெங்கி அட்லூரி இயக்கத்தில் தெலுங்கில் தனுஷ் நடிப்பில் வெளியான படம்தான் SIR. தமிழில் வாத்தி என்ற பெயரிலும் வெளியானது.

சமுத்திரகனி, சம்யுக்தா என பலரும் நடித்திருந்த இந்த படம் தனியார் பள்ளிகளின் ஆதிக்கத்தால் அரசு பள்ளிகள் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகின்றன? அதனை இளம் ஆசிரியராக வரும் தனுஷ் எப்படி முறியடிக்கிறார் என்பதுமாகவே அமைந்திருக்கிறது வாத்தி பட கதை.

விமர்சன ரீதியில் கலவையான கருத்துகளை பெற்றிருந்தாலும், முதல் முறையாக நேரடி தெலுங்கு படத்தில் நடித்த தனுஷுக்கு வாத்தி படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பையே பெற்றுக் கொடுத்திருக்கிறது. அதன்படி படம் வெளியாகி எட்டே நாட்களில் உலகம் முழுவதும் 75 கோடி ரூபாய் கலெக்‌ஷனை வாத்தி படம் பெற்றிருப்பதாக படத்தின் இயக்குநரே வெற்றி விழாவின் போது கூறியிருக்கிறார்.

முதல் இரண்டு நாட்களிலேயே 14 மற்றும் 20 கோடி ரூபாய் முறையே வசூல் நிலவரங்கள் சொல்லப்பட்டாலும் தயாரிப்பு நிர்வாகமே தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பது தனுஷுக்கு இருக்கும் மவுசு மேலும் அதிகரித்திருப்பதாகவே அவரது ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

இருப்பினும் தமிழ்நாட்டில் வாத்தி படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்றும் மறுபுறம் பேச்சுகள் அடிபடுகிறது. ஏனெனில், படம் ரிலீசாவதற்கு முன்பு இயக்குநர் வெங்கி அட்லூரி ஒரு நேர்காணலில் “நான் ஒன்றிய கல்வி அமைச்சரானால் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டு முறையை ஒழித்து பொருளாதார ரீதியில் இடஒதுக்கீடு கொடுப்பேன்.” என பேசியிருந்தார். அதேபோல், படமும் பார்த்து பழகிய டெம்பிளேட்டில் புதிய காட்சிகள் இல்லாமல் சாட்டை, வாகை சூடவா படங்களின் சாயல்களில் இருந்ததாலும் தமிழகத்தில் பெரிய வரவேற்பு இல்லை.

இந்த காரணங்களால் தமிழ்நாட்டில் வாத்தி படத்துக்கான வரவேற்பு கிட்டவில்லை என்றும் அதனாலேயே வசூலிலும் சற்று அடிபட்டிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. ஏனெனில், தமிழ் ஹீரோவான தனுஷூக்கு தமிழ்நாட்டில் 40 கோடி அளவுக்குதான் வசூல் கிடைத்துள்ளது.

அதேவேளையில் ஆந்திரா தெலங்கானாவில் 25 கோடிக்கும் மேல் தனுஷின் சார் (வாத்தி) படத்துக்கு வசூல் குவிந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், நடப்பாண்டில் நேரடி தெலுங்கு படமாக வெளியான விஜய்யின் வாரசுடு மற்றும் தனுஷின் சார் படத்துக்கான வசூல் நிலவரம்தான் நீயா நானா என்ற வாதத்தில் இருக்கிறது.

ஏனெனில் விஜய்யின் வாரிசு படத்தின் வாரசுடுவுக்கு தெலுங்கில் அதிக வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் ஆந்திரா தெலங்கானா சேர்த்தே வெறும் 13 கோடிதான் வசூலானதாக அதிகாரப்பூர்வ தகவல்களே வெளியானது.

ஆனால் தனுஷின் வாத்தி படம் தெலுங்கில் மட்டுமே 25 கோடி அளவுக்கு வெறும் எட்டே நாளில் வசூலித்திருப்பதாக வெளியான தகவலால் வாரிசை வாத்தி முந்தி விட்டதாகவே ஒரு பேச்சு எழுந்திருக்கிறது.

ALSO READ: 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com