நடிகர், நடிகைகள் சம்பளத்தை பிடிப்பது சரியா? - சர்ச்சைக்கு கஸ்தூரி, தனஞ்செயன் கருத்து

நடிகர், நடிகைகள் சம்பளத்தை பிடிப்பது சரியா? - சர்ச்சைக்கு கஸ்தூரி, தனஞ்செயன் கருத்து
நடிகர், நடிகைகள் சம்பளத்தை பிடிப்பது சரியா? - சர்ச்சைக்கு கஸ்தூரி, தனஞ்செயன் கருத்து

தமிழ் சினிமாவிற்குள் சர்ச்சை ஒன்றும் புதியதல்ல; வழக்கமான ஒன்றுதான். ஆனால் அது ஒவ்வொரு முறையும் ஒரு புதிய முகத்துடன் வெளிப்படுகிறது. இந்த முறை நடிகைகள் தங்களின் பட புரமோஷனுக்கு சரியாக வருவதில்லை என்ற ஒரு புகாரை எழுப்பி இருக்கிறார் ‘அம்மா கிரியேஷன்’ சிவா. சில நாட்களுக்கு முன் இவர் த்ரிஷாவின் ‘பரமபதம் விளையாட்டு’ பட புரமோஷன் விழாவில் கலந்து கொண்டபோது ஒரு கருத்தை முன்வைத்து பேசி இருந்தார்.

அவர் பேசும்போது “பெரிய ஹீரோக்களை வைத்து படம் பண்ணும் போது அந்த ஹீரோவை வைத்து நாம் புரமோஷன் செய்துக் கொள்ளலாம். அந்தப் படத்தின் விழாக்களுக்கு ஹீரோயின்கள் வரவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால், ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கும் படத்திற்கு நிச்சயமாக அந்தப் படத்தில் சம்பந்தப்பட்ட நாயகி வரவேண்டும். பெரிய நடிகையாக வளர்ந்த பிறகு அது அவர்களுக்கு வேண்டுமானால் தேவையில்லாமல் இருக்கலாம். ஆனால், அது தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் கட்டாயம் தேவையாக இருக்கிறது.

இந்தப் படத்தின் விழாவில் அவர் தவிர்க்க முடியாத காரணத்தால் கலந்து கொள்ளாமல் இருந்திருக்கலாம். அடுத்தடுத்து வெளியாக உள்ள படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு அவர் நிச்சயம் வர வேண்டும். வரவில்லை என்றால் அவர் வாங்கிய சம்பளத்தில் குறிப்பிட்டத் தொகையை அவர் திரும்ப தரவேண்டி இருக்கும்” என்றார். இவர் பெயர் குறிப்பிடாமல் பேசி இருந்தாலும் அந்தப் படத்தின் ஹீரோயினைதான் சொல்கிறார் என்பது வெளிப்படையாக அனைவருக்கும் புரிந்தது. ஏனெனில் த்ரிஷாதான் அன்று விழாவிற்கு வரவில்லை. ஆகவே இந்தப் பேச்சு பலரின் கவனத்தை ஈர்த்தது.

ஒரு தயாரிப்பாளராக அவர் முன்வைத்த கருத்து பல தயாரிப்பாளர்களின் வேதனையின் வெளிப்பாடு என எடுத்துக் கொள்ளலாம். அதே சமயம் இந்தப் பேச்சு குறித்து மாற்று கருத்துகளும் வலம் வர ஆம்பித்துள்ளன.

இது குறித்து திரைத்துறையில் நடிகை கஸ்தூரியிடம் கேட்டோம். அவர், “ஒரு படத்திற்கு எல்லோருடைய உழைப்பும் முக்கியம்தான். லைட் பாய் முதல் பெரிய நடிகர் நடிகை வரை அனைவரின் உழைப்பும் ஒன்றுதான். ஆனால் பணத்துடன் சேர்த்து கவலையையும் போட்டு படம் எடுப்பவர்கள் தயாரிப்பாளர்கள்தான். ஆகவே தயாரிப்பாளர்களின் வயிற்றெரிச்சலை யாரும் வாங்கிக் கட்டிக் கொள்ளக் கூடாது. சிவாவின் பேச்சை நான் ஒரு இயலாமையின் வெளிப்பாடாகதான் பார்க்கிறேன். எதையாவது செய்து அனைவரது ஒத்துழைப்பையும் பெற முடியாதா? என்ற மனநிலையில் அவர் இதை பேசியுள்ளார்.

முதலில் கெஞ்சி பார்த்துவிட்டு இப்போது மிஞ்சி பார்க்கிற இயலாமையாகதான் இதை பேசியுள்ளார். எந்த ஒரு தயாரிப்பாளரும் வயிறு எரிந்து பேசும் அளவுக்கு யாரும் நடந்து கொள்ளக்கூடாது என்பது என் கருத்தும். கட்டாயம் படத்தின் புரமோஷனுக்கு நடிகை நடிகர்கள் தங்களால் முயன்ற அளவுக்கு உதவிகளை செய்து தரவேண்டும். தயாரிப்பாளர்களுக்கு அதிக செலவு வைக்காமல் புரமோஷன் செய்து கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்கள் காலத்து தலைமுறை வழக்கம்.

‘வெல்வெட் நகரம்’ படத்தில் நான் இப்போது நடித்திருக்கிறேன். இந்தப் படத்தில் வரலக்ஷ்மி உடன் இணைந்து முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளேன். இப்போது அதற்கான புரமோஷன் வேலைகள் நடந்து வருகின்றன. ஆனால், நான் ஹைதராபாத்தில் ஷூடிங்கில் இருக்கிறேன். ஆகவே என்னால் புரமோஷன் வேலைகளில் பங்கேற்க முடியவில்லை. அதற்காக நான் தற்மசங்கடமான மனநிலையில் இருக்கிறேன். அது எனக்கு வருத்தமாக இருக்கிறது. ஒருமுறை இது நடக்கலாம். ஆனால், வழக்கமாக நடக்கூடாது” என்கிறார்.

மேலும், இது குறித்து பேசிய பத்திரிகையாளர் வெங்கடேஷ், “சினிமா என்பதே கூட்டு முயற்சிதான். ஆகவே அனைவரின் பங்களிப்பும் இருக்க வேண்டும். ஒவ்வொரு நடிகர், நடிகைகளுக்கும் ஒரு மார்க்கெட் வேல்யூ இருக்கிறது. அவர்கள் படத்தின் புரமோஷனுக்கு வந்தால் படத்தின் மார்க்கெட் வேல்யூ உயரும் என்று தயாரிப்பாளர்கள் நம்புகிறார்கள். அதை வைத்து வியாபாரம் செய்யலாம் என தயாரிப்பாளர் நினைக்கிறார். அதில் தப்பு இல்லை. அப்படி உள்ள போது ஒருவர் மட்டும் நான் பட புரமோஷனுக்கு வர மாட்டேன் என்பது தனி சம்பளம் கேட்பது நியாயமில்லை. ஆகவே படத்திற்கான ஒப்பந்தம் போடும் போதே இதற்கு எல்லாம் சேர்த்து ஒப்பந்தம் போடப்பட வேண்டும்” என்கிறார்.

தயாரிப்பாளர் தனஞ்செயனிடம் பேசிய போது, “இப்போது டாப்சி பாலிவுட்டில் ஒரு படம் நடித்துள்ளார். அதற்கான புரமோஷனுக்காக அவர் ஒவ்வொரு ஊராக சுற்றி வருகிறார். அது சரிதான். ஆனால், அதற்காக சம்பளத்தில் ஒரு தொகையை திரும்ப கொடுங்கள் என கேட்க முடியாது. அவர்கள் நடித்ததற்கான சம்பளத்தை வாங்கிக் கொள்கிறார்கள். அதை திரும்ப கேட்க முடியாது. உங்க படமாக இதை எடுத்து கொண்டு பொறுப்பாக நடந்து கொள்ளுங்கள் எனக் கோரிக்கை வைக்கலாம். அப்புறம் ஒரு நடிகையோ நடிகரோ படத்தின் புரமோஷனுக்கு வராமல் போக பல காரணங்கள் இருக்கலாம். அவருக்கு சரியான சம்பளம் போய்ச் சேராமல் இருக்கலாம். அந்தப் படத்தில் அவரது காட்சி அமைப்பு குறித்து அவருக்கு வருத்தம் இருக்கலாம். அல்லது வேறு ஏதாவது சிக்கல் இருக்கலாம். ஆகவே அனைத்தையும் நாம் மனத்தில் கொள்ள வேண்டும்” என்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com