FACT CHECK: நடிகர் விஜய்யின் குட்டி ஸ்டோரி காப்பி அடிக்கப்பட்டதா? - முழு விவரம்!

FACT CHECK: நடிகர் விஜய்யின் குட்டி ஸ்டோரி காப்பி அடிக்கப்பட்டதா? - முழு விவரம்!
FACT CHECK: நடிகர் விஜய்யின் குட்டி ஸ்டோரி காப்பி அடிக்கப்பட்டதா? - முழு விவரம்!

நடிகர் விஜய்யின் படங்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பை காட்டிலும், அவர் நடிப்பில் உருவான படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் சொல்லும் குட்டிக் கதையை கேட்கவே ரசிகரகள் ஓடோடி வருவார்கள் என்பது கடந்த காலங்களில் உறுதியான ஒன்றுதான்.

அதுபோலவே நேற்று (டிச.,24) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த வாரிசு பட இசை வெளியீட்டு விழாவிலும் நடிகர் விஜய் குட்டிக்கதை சொல்லி ரசிகர்களை ஆரவாரம் செய்திருக்கிறார். அந்த விழாவில் விஜய் பேசியதுதான் தற்போது எல்லா சமூக வலைதளங்களிலும் ஹாட் டாபிக்காக இருந்து, வைரலாகி வருகிறது.

அந்த குட்டிக்கதையில் அன்பு பற்றி விஜய் பேசியிருந்தார். அண்ணன் - தங்கை இடையே நடக்கும் பாசம் குறித்த கதையைச் சொல்லி அன்புதான் இந்த உலகத்துலேயே பெரிய விஷயம் என பேசி கதையை முடித்தார். இதனையடுத்து 30 வருட சினிமா பயணம் பற்றியும் அதில் அவருக்கு இருந்த பிரச்னைகள் பற்றியும் கேள்வி எழுப்பிய போது “பிரச்னைகளெல்லாம் பழகிருச்சு. நாம சரியான பாதையில போறதுனாலதான் நம்மல எதிர்க்கிறாங்க, தேவையான விமர்சனமும், தேவையில்லாத எதிர்ப்பும்தான் நம்மை ஓட வைக்கும்.” எனக் கூறினார் விஜய்.

இதனைத் தொடர்ந்து, “1990களில் எனக்கு போட்டியாக ஒரு நடிகர் உருவானார். அந்த போட்டியாளர் வளர வளர நானும் போட்டிப்போட்டு ஓடினேன். அந்த போட்டியாளர் பெயர் ஜோசப் விஜய். நீங்கள்தான் உங்களுக்கான போட்டியாளர்.” என விஜய் பேசியிருந்தார்.

விஜய் பேசிய இந்த வீடியோக்களெல்லாம் தற்போது ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் படுவேகமாக வைரலாக்கப்பட்டு வருகிறது. இப்படி இருக்கையில், வாரிசு இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசப் போகிறார் என அறிவிப்பு வெளியானதில் இருந்தே கலவையான விமர்சனங்களும் கருத்துகளும் கூடவே வந்த வண்ணம்தான் இருந்தன.

குறிப்பாக, விஜய் சொல்லப் போகும் குட்டிக் கதைக்கு அவரே ஒத்திகை பார்ப்பது போல பல மீம் பதிவுகளும் ட்விட்டர் உள்ளிட்ட தளங்களில் பறந்தன. இந்த நிலையில், வாரிசு பட விழாவில், தன்னை தானே போட்டியாளராக பாவித்து விஜய் பேசிய அந்த பேச்சு ஏற்கெனவே இந்திய சினிமா உலகின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்த் நடிகர் விக்ரமின் பட விழாவின் போதும், 86வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த நடிகருக்காக விருதை வென்ற ஹாலிவுட் நடிகர் மேத்யு மெக்கோனாஹே பேசிய பேச்சும்தான் வாரிசு விழாவில் நடிகர் விஜய் பேசியதற்கான நாதமாக இருக்கிறது எனக் குறிப்பிட்டு வீடியோக்களையும் சுட்டிக்காட்டி பகிரப்பட்டு வருகிறது.

அதன்படி, சாமி படத்தின் வெற்றி விழாவில் பேசிய ரஜினி, “எனக்கு எதிரியும் நான் தான். நண்பனும் நான் தான். என்னுடைய படம்தான் எனக்கு எதிரி. என்னுடைய படம்தான் எனக்கு தீர்வு. என் படத்துக்குதான் நான் போட்டியாக இருக்கேன். மத்தவங்க படத்துக்கு இல்ல. இப்போ எனக்கு போட்டியாக இருப்பது படையப்பா. அந்த படத்தை விட பெரிய ஹிட் கொடுக்கணும். ” என்று கூறியிருப்பார்.

அதேபோல ஆஸ்கர் மேடையில் ஹாலிவுட் நடிகர் மேத்யூ, “15 வயசா இருக்கப்போ என் வாழ்க்கைல ஒருவர் வந்து “உன் ஹீரோ யாரு?” என கேட்டார். யோசிச்சுதான் சொல்லனும்னு 2 வாரம் கழித்து டைம் கேட்டேன். மறுபடியும் அந்த நபர் வந்து கேட்டார். அப்போ, “அத பத்தி யோசிச்சேன். வேற யாரும் இல்ல. நான்தான் 10 வருஷம் தள்ளி இருக்கேன்.” சொன்னேன். பத்து வருஷம் கழிச்சு என் 25வது வயசுல அந்த நபர் வந்து கேட்டப்போ, “ரொம்ப பக்கத்துல இல்ல. என் ஹீரோ இப்போ 35 வயசுல இருக்கான்” என சொன்னேன்.

ஆகவே, என்னோட வாழ்க்கை பயணத்துல என் ஹீரோ எப்போவுமே என்னை விட பத்து வருஷம் தொலைவுலயே இருக்கான். என் ஹீரோவ போல ஆக மாட்டேன். அதை அடையவும் போறதில்ல. அது இப்படியே இருக்குறதுதான் நல்லது. அதுதான் என்ன உந்தித் தள்ள உதவியா இருக்கு.” என பேசியிருப்பார்.

இந்த இரு வெவ்வேறு நட்சத்திரங்கள் பேசியதைதான் தன்னுடைய குட்டி ஸ்டோரியாக மாற்றியமைத்து விஜய் வாரிசு பட விழாவில் பேசியிருக்கிறார் என நெட்டிசன்கள் குறிப்பிட்டு பதிவிட்டு வருகிறார்கள். அதேவேளையில், இதற்கு முன்பு பல உச்ச நட்சத்திரங்கள் இதேப்போன்று சொல்லியிருந்தாலும் அதனை இன்ஸ்பிரேஷனாக கொண்டு விஜய் பேசியிருக்கலாம் என்றும் ஒரு புறம் கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com