”நடிகர் விஜய் சூப்பர் ஸ்டாராக இருப்பதற்கு காரணம் இதுதான்” - சீமான் புகழாரம்

”நடிகர் விஜய் சூப்பர் ஸ்டாராக இருப்பதற்கு காரணம் இதுதான்” - சீமான் புகழாரம்
”நடிகர் விஜய் சூப்பர் ஸ்டாராக இருப்பதற்கு காரணம் இதுதான்” - சீமான் புகழாரம்

”நடிகர் விஜய் சூப்பர் ஸ்டாராக இருப்பதற்கு காரணம் அவரது உழைப்பு” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

`பச்சை என்கிற காத்து', `மெர்லின்', `எட்டுத்திக்கும் பற' உள்ளிட்ட படங்களை இயக்கியவர், கீரா. இவர் எம்.ஜி.ஆரின் பேரன் ராமச்சந்திரன் என்கிற ஜூனியர் எம்.ஜி.ஆர்., ஐஸ்வர்யா தத்தா, யோகிபாபு, சென்ராயன் உள்ளிட்ட பலரை வைத்து ’இரும்பன்’ என்கிற படத்தை இயக்கியுள்ளார்.  இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை கே.கே.நகரில் உள்ள சத்தியா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் இன்று (ஜனவரி 6) நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். இதில் பேசிய சீமான், “சமூகப்பற்று, முற்போக்குச் சிந்தனை கொண்டவர் இயக்குநர் கீரா. ஜூனியர் எம்ஜிஆர் திரைப்படம் நடிக்க வருவதற்கு உங்கள் தாத்தா பெயர் பயன்படலாம். எம்ஜிஆருக்கு ஒரு வரலாறு உண்டு. அதனை வாசித்தால் வலிக்கும். 42 வயதில்தான் அவர் கதாநாயகனாக வந்தார். பசியோடு பட்டினியோடு சிலம்பம் கற்றவர் எம்ஜிஆர். அதனால்தான் அவர், ’வாத்தியார்’ என்று அழைக்கப்பட்டார்.

எப்படி தடுக்க வேண்டும், எப்படி அடிக்க வேண்டும் என்று தெரிந்து சண்டையிடுவார். அதனால்தான் தமிழகத்தில் மங்காத புகழ் கொண்டுள்ளார் எம்ஜிஆர். நடிகர் விஜய் நடிக்க வருவதற்கு அவரது அப்பா எஸ்ஏசி (சந்திரசேகர்) உதவி இருப்பார். ஆனால் விஜய் சூப்பர் ஸ்டாராக இருப்பதற்கு காரணம் அவரது உழைப்பு. அவரது நடனம் மிக அருமையானது. இந்தியாவிலேயே அவரைப்போல ஆட ஆள் இல்லை.

அதுபோலத்தான் நடிகர் தனுஷ். அவர் நடிக்க வருவதற்கு அவரது அப்பா கஸ்தூரிராஜா உதவி இருக்கலாம். ஆனால் தனுஷ், தன்னுடைய உழைப்பால் தற்போது உயர்ந்து நிற்கிறார். ஆகவே தாத்தா எம்ஜிஆர் பெயரை பேரன் காப்பாற்ற வேண்டாம். கெடுக்காமல் இருக்க வேண்டும். ஆகவே, ஜூனியர் எம்ஜிஆர் நன்றாக உழைத்து முன்னுக்கு வர வேண்டும். இந்தப் படத்தின் தலைப்பை, ’குறவர்’ என்று வைக்கப் போனார்கள். நான்தான் அதை மாற்றி வைக்கச் சொன்னேன்.  அதன்படி, படத்தின் பெயர் ’இரும்பன்’ என்று மாற்றி வைக்கப்பட்டது.

தமிழ்ப் பேரினத்தின் ஆதிகுடி குறவர்தான். முதல் மாந்தன் தமிழன். அவன் பேசிய மொழி தமிழ். ’கல் தோன்றி மண் தோன்றா முன்பு தோன்றியவர்கள் தமிழர்’ எனப் பல அறிஞர்கள் கூறிவிட்டார்கள். இந்த படம் வெற்றி அடைய வேண்டும். திரைப்பட துறை சுருங்கிவிட்டது. 10 நடிகர்கள், 10 தயாரிப்பாளர்கள் என்று சுருங்கிவிட்டது. சினிமாவில் இருந்தால் வாடகைக்கு வீடு கொடுக்கமாட்டார்கள். சினிமாவில் கஷ்டப்பட வேண்டும்.

சினிமாவில் பெரிய ஆளாக ஆகிவிட்டால், வீடு கொடுக்காவிட்டாலும் நாட்டை கொடுத்துவிடுவார்கள். திருமணம் செய்ய பெண் கொடுக்காவிட்டாலும் ஆள்வதற்கு மண்ணை கொடுத்துவிடுவார்கள்.

இந்த படம் காட்டுப் பகுதியில் எடுக்கப்பட்டுள்ளது. மழைக்கு மரங்கள் அவசியம். காடுகள், காட்டு விலங்குகள், மரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். 24 மணி நேரம் ஆக்சிஜன் தரக்கூடியது ஆலமரம் மற்றும் அரசமரங்கள். அதனால்தான் கோயில் குளங்களில் அரசமரம், ஆலமரங்களை வைத்தார்கள். மரங்களை வளர்க்க வேண்டும். இந்த படம் நல்ல கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com