“விக்ரமுடன் பணியாற்ற ஆவலுடன் உள்ளேன்” - தமிழ் சினிமாவில் இர்ஃபான்

“விக்ரமுடன் பணியாற்ற ஆவலுடன் உள்ளேன்” - தமிழ் சினிமாவில் இர்ஃபான்
“விக்ரமுடன் பணியாற்ற ஆவலுடன் உள்ளேன்” - தமிழ் சினிமாவில் இர்ஃபான்

விக்ரமின் 58ஆவது படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் இர்ஃபான் பதான்  நடிக்க உள்ளார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

அருள்நிதி நடித்த ’’டிமான்டி காலனி’’, நயன்தாரா, விஜய்சேதுபதி நடித்த, ’’இமைக்கா நொடிகள்’’ படங்களை இயக்கியவர் அஜய் ஞானமுத்து. இவர் அடுத்து இயக்கும் படத்தில் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். இது விக்ரமுக்கு 58 ஆவது படம். ஆக்‌ஷன் த்ரில்லர் படமான இதை, 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வயாகாம் 18 ஸ்டூடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. அடுத்த வருடம் கோடை விடுமுறையில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இதன் படப்பிடிப்பு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் இர்ஃபான் பதான் ஒரு புதிய தோற்றத்தில் நடிக்கவுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை படத்தின் தயாரிப்பு நிறுவனம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. அதில், “இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் எங்கள் படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்”எனப் பதிவிட்டுள்ளனர். இதற்கு இர்ஃபான் பதான் தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் பதிலும் அளித்துள்ளார். அதில் “இப்படத்தில் பணியாற்ற ஆவலாக உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார். 

முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கும் சந்தானம் நடிக்கும் ‘டிக்கிலோனா’ படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இவர்கள் இருவரும் ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி உள்ளனர். விக்ரம் 58 படத்திற்கு ஏஆர் ரகுமான் இசை அமைக்க உள்ளார். இந்தப் படத்தில் விகரம் 25 வேடங்களில் நடிக்க உள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com