எந்த படங்களில் என்னென்ன டெக்னாலஜியை அறிமுகம் செய்தார் கமல்? 66 ஆண்டுகால சினிமா நிறைவின் தொகுப்பு!
ஏவிஎம் தயாரிப்பில் பீம் சிங் இயக்கிய களத்தூர் கண்ணம்மா படத்தில், ஐந்து வயது கமல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அன்றிலிருந்து இன்று வரை தொடர்ச்சியாக சினிமாவின் பல்வேறு களங்களிலும் பணியாற்றியுள்ளார்.
மேலும் சினிமாவின் ஒவ்வொரு கட்டத்திலும், புதிய தொழிநுட்பங்களை கொண்டு வந்தவர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் கமல்ஹாசன். அப்படி கமல் கொண்டு வந்த புது விஷயங்களை தான் இந்த தொகுப்பில் பார்க்கப் போகிறோம்.
என்னென்ன படங்களில் என்னென்ன தொழில்நுட்பம்?
விக்ரம்
ராஜசேகர் இயக்கத்தில் 1986ஆம் ஆண்டு வெளிவந்த படம் 'விக்ரம்'. கோலிவுட்டில் முதல் முறையாகப் பாடல்களைப் பதிவு செய்யக் கணினிகள் பயன்படுத்தப்பட்டது இப்படத்தில் தான். அதே போல ஸ்டெடி கேமை தமிழ் திரையுலகிற்கு இந்த படத்தின் மூலம்தான் அறிமுகம் செய்யதனர்.
தேவர் மகன்
கமல்ஹாசன் கதை எழுதி நடித்து பரதன் இயக்கி 1992-ல் வெளியான படம் தேவர்மகன். இந்தப் படத்திற்காகதான், தமிழ் சினிமாவில் முதன்முறையாக திரைக்கதை எழுதுவதற்காக MOVIE MAGIC என்ற மென்பொருளை கமல் பயன்படுத்தினார்.
மகாநதி
சந்தானபாரதி இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து 1994-ல் வெளியான படம் `மகாநதி'. இந்தப் படம் ஆவிட் மென்பொருள் மூலம் எடிட் செய்யப்பட்டது. இந்தியாவிலேயே இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்திய முதல் படம் இதுவே.
குருதிப்புனல்
கமல்ஹாசன், அர்ஜூன், நாசர் நடிப்பில் உருவாகி 1995ல் வெளியான படம் `குருதிப்புனல்'. இப்படத்தை பி சி ஸ்ரீராம் இயக்கியிருந்தார். Dolby Stereo surround SR தொழில்நுட்பத்தை பயன்படுத்திய முதல் தமிழ்ப்படம் இதுவே.
இந்தியன்
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரண்டு வேடங்களில் நடித்து 1996ல் வெளியான படம் `இந்தியன்'. இந்திய சினிமாவில் முதன்முறையாகச் சுதந்திரப் போராட்ட வீரர் சேனாபதி கதாபாத்திர தோற்றத்திற்காக கமல்ஹாசன் Prosthetic makeup தொழில்நுட்பத்தை பயன்படுத்தினார்.
ஆளவந்தான்
கமல்ஹாசன் எழுதிய தாயம் என்ற நாவலை திரைப்படமாக மாற்றி சுரேஷ்கிருஷ்ணா இயக்கி 2001ல் வெளியான படம் `ஆளவந்தான்'. இந்தியாவில் அனிமேஷன் காட்சிகளைப் பயன்படுத்திய முதல் படம் இதுவே. இப்படத்தில் இடம்பெற்ற அனிமேஷன் காட்சிகளால் உந்தப்பட்டு, கில் பில் படத்தில் ஒரு அனிமேஷன் காட்சியை உருவாக்கியதாக கூறியிருப்பார் பிரபல ஹாலிவுட் இயக்குநர் குவென்டின் டாரண்டினோ.
இப்படத்தில் கமல்ஹாசன் ஹீரோ மற்றும் வில்லன் என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். அதற்காக முதன்முதலாக `மோஷன் கண்ட்ரோல் ரிக்' கேமராக்களை பயன்படுத்தி எடுக்கப்பட்ட முதல் இந்திய திரைப்படமும் இது தான். கதாபாத்திரங்களின் அசைவுகளை கணினி மூலம் கணித்துக் கொண்டு அதற்கு ஏற்றார் போல கேமராக்கள் தானாகவே நகர உதவுவது தான் "மோஷன் கண்ட்ரோல் ரிக்". இதைக் கொண்டு இரட்டை வேட படத்தை புதுமையாக கொடுத்தார் கமல்ஹாசன்.
விருமாண்டி
கமல்ஹாசன் இயக்கி நடித்து பல சர்ச்சைகளுக்கு நடுவே 2004ல் வெளியான படம் `விருமாண்டி'. சினிமா ஆர்வலர்கள் பலரும் கொண்டாடக் கூடிய படம் இது. லைவ் சிங்க் பயன்படுத்தப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் இதுவே. அதாவது படத்துக்கு பின்பு தனியாக டப்பிங் செய்யாமல், படம் எடுக்கும் போதே வசனத்தையும் ஒலிப்பதிவு செய்யும் முறை.
மும்பை எக்ஸ்பிரஸ்
சிங்கீதம் ஸ்ரீவாச ராவ் இயக்கத்தில் கமல்ஹாசன் கதை எழுதி நடித்து 2005ல் வெளியான படம் `மும்பை எக்ஸ்பிரஸ்'. அதுவரை பிலிம் ரோல்கள் பயன்படுத்தி எடுக்கப்பட்ட படங்களுக்கு மத்தியில், முதல் முறையாக டிஜிட்டல் வடிவில் எடுக்கப்பட்ட இந்தியப் படம் இது.
வேட்டையாடு விளையாடு
கௌதம் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து 2006ல் வெளியான படம் `வேட்டையாடு விளையாடு'. சூப்பர் 35 கேமரா ஃபார்மேட் பயன்படுத்தி எடுக்கப்பட்ட முதல் தமிழ்ப்படம் இதுதான். 35MM விட பெரிய ஃபிரேமை மற்றும் அதிகப்படியான படப்பிடிப்பு பரப்பைக் கொடுப்பதால், CGI மற்றும் மோஷன் டிராக்கிங் போன்ற Post-production பணிகளுக்கு இது உதவும்.
விஸ்வரூபம்
கமல்ஹாசன் இயக்கி நடித்து 2013ல் வெளியான படம் `விஸ்வரூபம்'. ஆரோ 3டி என்ற ஒலி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய முதல் இந்தியத் திரைப்படம் 'விஸ்வரூபம்'தான்.
இப்படி பல புதுமைகளை இந்திய சினிமாவுக்கும், தமிழ் சினிமாவுக்கும் கொண்டு வந்தவர் கமல்ஹாசன். இன்னும் பல புதுமைகளை சினிமாவுக்கு சேர்ப்பார் என இந்திய சினிமா எதிர்பார்த்து காத்திருக்கிறது. 66 ஆண்டு கால பயணம் இன்னும் பல ஆண்டுகள் தொடர நாமும் கமலை வாழ்த்துவோம்!