இளையராவின் பொருட்களை எடுக்க அவரை உள்ளே அனுமதிக்க முடியாது என பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
இளையராஜா 1976 ஆம் ஆண்டு முதல் பிரசாத் ஸ்டூடியோவில் அவரது அனைத்து படத்திற்கும் இசையமைத்து வருகிறார். அந்த இடத்தை காலி செய்வது தொடர்பாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே பிரச்னை இருந்துவந்தது. இதைத்தொடர்ந்து கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இளையராஜா வைத்திருந்த இசை ஸ்டூடியோ காலி செய்யப்பட்டு, அவர் வெளியேற்றப்பட்டதாக பிரசாத் ஸ்டூடியோ தரப்பில் அறிவிக்கப்பட்டது.
ஆனால் இளையராஜா, தனது இசைப்பொருட்கள், இசைக்கோப்புகள், மின்னணு சாதனங்கள் உள்ளே இருப்பதாகவும் அவை பாழாகிவிடும் என்பதால் 50 லட்சம் இழப்பீடு கொடுக்க வேண்டும் எனக்கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும், தன்னை ஸ்டூடியோவில் தியானம் மேற்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதுகுறித்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது தியானம் மேற்கொள்ள அனுமதி அளிக்க முடியுமா என கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று விசாரணைக்கு வந்தபோது “பொருட்களை எடுத்துச்செல்ல எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் இளையராஜாவை அனுமதிக்க முடியாது. அவரது பிரதிநிதிகள் யாரேனும் வந்தால் அனுமதிக்கிறோம். இளையராஜா ஸ்டூடியோவிற்குள் வந்தால் கூட்டம் கூட வாய்ப்பு இருக்கிறது. பயன்படுத்தப்படாத பொருட்களின் இழப்பீடுக்கு நாங்கள் பொறுப்பாக முடியாது” என பிரசாத் ஸ்டூடியோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்க மறுத்த நீதிபதி, இளையராஜா மற்றும் அவரது வழக்கறிஞர், பிரசாத் ஸ்டூடியோ நபர்கள் மற்றும் அவர்களது வழக்கறிஞர், மற்றும் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆணையரை நியமித்து இந்த 5 தரப்பு மட்டும் செல்லும் வகையில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும். இதற்கு தயாரா என பிரசாத் ஸ்டூடியோ, இளையராஜா தரப்பு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை நாளைக்கு தள்ளிவைத்துள்ளார்.