"முழு ஈடுபாடும் இசையில்தான்.." - நீதிமன்ற குறுக்கு விசாரணையின் போது இளையராஜா சொன்ன வார்த்தைகள்!
தேவர்மகன், குணா உள்ளிட்ட 109 படங்களின் பாடல்களின் உரிமை தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார் இசையமைப்பாளர் இளையராஜா.
அப்போது அவருடைய சொத்து மதிப்புகள் குறித்தும், தயாரிப்பாளர்களுடனான ஒப்பந்தம் குறித்தும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இளையராஜாவிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது.
எத்தனை பங்களாக்கள் உள்ளது?
தேவர்மகன், குணா உள்ளிட்ட 109 பட பாடல்களை யு டியூப் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிட தடை கோரி பாடல்களின் உரிமை பெற்ற மியூசிக் மாஸ்டர் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. இதில் எதிர்மனுதாரராக இளையாராஜா சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் வழக்கு தொடர்பாக இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியமளித்தார்.
அப்போது அவரிடம் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக, ‘பாடல்களின் பதிப்புரிமை பற்றியும், தயாரிப்பாளர்களிடம் மேற்கொண்ட ஒப்பந்தம், சொத்து மதிப்புகள்’ தொடர்பாக குறுக்கு விசாரணை செய்யப்பட்டது.
எத்தனை பங்களாக்கள் உள்ளது? என்ற கேள்விக்கு, முழு ஈடுபாடும் இசையில் உள்ளதால், உலகலாவிய பொருட்களை பற்றி எனக்கு தெரியாது என்றும், பேர், புகழ் மற்றும் செல்வம் அனைத்தும் சினிமா மூலம் கிடைத்தது என இளையராஜா தெரிவித்துள்ளார்.