’குட் பேட் அக்லி'யில் இளையராஜா பாடல்கள்.. நீதிமன்றத்தில் படக்குழு சொன்ன செய்தி!
நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படத்தில், தன் அனுமதியில்லாமல், இளமை இதோ இதோ, ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்ச குருவி' ஆகிய பாடல்களை பயன்படுத்தி உள்ளதாக கூறி, இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 'குட் பேட் அக்லி' படத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த தடையை நீக்கக் கோரி மனுத்தாக்கல் செய்த மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், குட் பேட் அக்லி திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களின் உரிமையை, சோனி நிறுவனத்திடம் இருந்து பெற்று பயன்படுத்தியதாகவும், தற்போது இளைராஜா இசையமைத்த சம்பந்தப்பட்ட பாடல்களை குட் பேட் அக்லி திரைப்படத்தில் இருந்து நீக்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்ளக் கோரி சோனி நிறுவனம் சார்பில் ஏற்கனவே மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த மனுக்கள் நீதிபதி, என்.செந்தில்குமார் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தன.
அப்போது, இளையராஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சரவணன், சோனி நிறுவனம் தாக்கல் செய்துள்ள வழக்கில் தங்களையும் இணைக்கக் கோரி இடையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அது இன்னும் எண்ணிடப்படவில்லை எனக் கூறினார்.
அப்போது, படத்தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.வி.பாலசுப்பிரமணியம், மூன்று பாடல்களையும் பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதையடுத்து, மனுக்கள் மீதான விசாரணையை அக்டோபர் 23ம் தேதிக்கு நீதிபதி செந்தில்குமார் தள்ளிவைத்தார்.